கேள்வி: விலங்குகளுக்கு மட்டும் ஏன் வால்?
பதில்: நமக்கும்கூட வால் இருக்கத்தான் செய்தது. இப்போது இல்லையென்றாலும், அம்மாவிடம் கேளுங்கள்... உங்களை வால் பையன் என்றுகூடச் சொல்வார்கள், சொல்லியிருக்கிறார்கள். நம்மிடம் நிறைய வால்பையன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நமது முன்னோர்கள் குரங்கிலிருந்து பிறந்தவர்கள் என்று படித்திருப்பீர்கள். அப்போதெல்லாம், மரங்களில் கிளைகளைப் பற்றிக் கொண்டு கிளைக்குக் கிளை தாவுவதற்கு வால் தேவைப்பட்டது. ஆனால் பரிணாம வளர்ச்சியால் மனிதனாக மாற மாற இந்த வாலுக்குத் தேவையில்லாமல் போய்விட்டது என்கிறார்கள் விஞ்ஞானிகள். நடக்க ஆரம்பித்த மனிதனுக்கு வால் பெரும் தடையாக இருந்ததால் வால் சுருங்கிக் கொண்டே போய், கடைசியில் இல்லாமல் போய்விட்டது. இப்போது கூட நமது உடம்பில் "டெயில்போன்' (வால் எலும்பு) என்று ஒன்று மிச்சமிருக்கத்தான் செய்கிறது. இந்த எலும்புதான் நாம் சரியான முறையில் நிமிர்ந்து உட்காருவதற்கு உதவுகிறது.
சரி, குரங்குகளுக்கு மரத்தில் அங்குமிங்கும் தாவுவதற்கு வால் உதவுகிறது. மற்ற விலங்குகளுக்கு?
சற்றே நீளமான வால் இருக்கும் மிருகங்களுக்கு ஈக்கள், மற்றும் பூச்சிகளை விரட்ட இந்த வால் பயன்படுகிறது.
நாய் தனது நன்றியை நமக்கு வாலை ஆட்டித் தெரியப்படுத்துகிறது.
விலங்குகள் உடம்பை பாலன்ஸ் செய்வதற்கு வால் பயன்படுகிறது.
பல்லிகள் ஆபத்துக் காலத்தில் அறுத்துவிட்டு விட்டு, தப்பித்துக் கொள்ள வால் பயன்படுகிறது.