பேரரசர் அக்பரும், மந்திரி பீர்பாலும் நெருங்கிய தோழர்களாக இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே!
ஒரு மாலை வேளை. அக்பரும், பீர்பாலும் உரையாடிக் கொண்டிருந்தனர். இருவரும் சாப்பிடுவதற்காக இரண்டு தட்டுகளில் பேரீச்சம்பழங்களைக் கொண்டுவரச் சொன்னார் அக்பர்.
அக்பருக்கு பீர்பாலிடம் வேடிக்கை செய்ய வேண்டும் என்று தோன்றியது! அவர் பழங்களை சாப்பிட்டு விட்டு பேரீச்சம்பழக் கொட்டைகளை பீர்பால் பக்கம் தள்ளி விட்டார்.
மேலும் பீர்பாலைப் பார்த்து, ""என்ன பீர்பால்!... இன்று ரொம்பப் பசியோ?.....நிறையப் பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டீர் போலிருக்கிறதே!'' என்றார்.
பீர்பாலுக்கு மன்னரின் எண்ணம் புரிந்துவிட்டது. என்றாலும் ஒன்றும் அறியாதவர் போல, ""மன்னா!...எவ்வளவு பசி இருந்தாலும், கொட்டைகளை நீக்கிவிட்டே நான் பேரீச்சம்பழங்களைச் சாப்பிடுவது வழக்கம்!.... ஆனால் மன்னருக்கு ஏற்பட்ட பசி அகோரப் பசி போலும்!... கொட்டைகளையும் சேர்த்தே சாப்பிட்டு இருக்கிறீர்களே!.... '' என்றார்.
பீர்பாலின் சாமர்த்தியமான பேச்சு அக்பரைச் சிரிக்க வைத்துவிட்டது!
பிறகு மன்னரும், பீர்பாலும் சந்தோஷமாக அவர்களது உரையாடலைத் தொடர்ந்தனர்.