ஊரில் வாழும் மக்களை
ஒன்று சேர்க்கும் திருவிழா!
தேரை இழுக்கும் நாளிலே
ஊரை இழுக்கும் திருவிழா!
உச்சி மீது கலசமும்
உட்புறத்தில் தெய்வமும்
தச்சன் செய்த சிற்பமும்
தாங்கி நிற்கும் கோயில் தேர்!
வடங்கள் உண்டு நீளமாய்!
மக்கள் கூடி இழுக்கையில்
தடங்கல் இன்றி அன்னம் போல்
தடங்கள் மீது நகருது!
உருளும் பெரிய தேரினை
உருட்டும் ஆணி சிறியது!
சிறிய தென்று எதனையும்
கேலி செய்தல் தவறுதான்!
அகன்ற வீதி நான்கினை
ஆண்டில் ஒரு நாள் மட்டும்
நகர்ந்து சுற்றி முடித்தபின்
நிலையம் வந்து சேருது!
கன்றுக்காக மகனின் மேல்
சோழன் தேரை ஓட்டினான்!
அன்று பாரி முல்லைக்கு
அழகுத் தேரை வழங்கினான் !
வேணுகானக் கண்ணனும்
விஜயன் தேரை ஓட்டினான்!
ஞான மொழியைக் கீதையாய்
தேரில் நின்று ஓதினான்!