கண்கவரும் தோற்றங்களில்
சிரிப்போம் - மணங்
கமழ்ந்திடவே அழகாய் இதழ் விரிப்போம்!
வண்ணம் பல கொண்ட நாங்கள்
பூக்கள்! - புலவர்
வடித்திடுவார் எம்மைப் போற்றிப் பாக்கள்!
காலை இளம் பொழுதுகளில்
மலர்வோம்! - அந்திக்
கருக்கலிலும் எம்மில் சிலர் அலர்வோம்!
சோலையோடு தோட்டங்களில்
பூப்போம்! - உள்ளம்
சொக்கும் வண்ணம் காற்றில் மணம் சேர்ப்போம்!
இயற்கை தந்த எழிற்கொடைகள்
நாங்கள் - எமக்கு
இணையழகு கண்ட துண்டோ நீங்கள்
பயன் மிகுந்த வாழ்வு
எமதாகும்! - எம்மைப்
பாராட்டும் கடமை உமதாகும்!