அழகா ஒரு காடு! அதில் "உபாசா' ன்னு ஒரு யானை இருந்தது. அது அழகான, அன்பான யானை. அந்த உபாசா யானைக்கு ஒரு குட்டி யானை! அது பேரு இண்டி! இண்டி ரொம்ப சுட்டி! இண்டி கொசுவைத் துரத்தும்! பாலு மாமான்னு ஒரு குரங்கு. அதுக்கு வால் நீளமா இருக்கும்! அந்த வாலைப் பிடிச்சு இண்டி இழுக்கும்! கால்ல முள்ளைக் குத்திக்கும்! ஒரே சேட்டைதான்!
அவங்க அம்மா உபாசா, இண்டியைக் கண்டிக்கும்! ஆனா இண்டி ஏதாவது குறும்பு பண்ணி அம்மாவைச் சிரிக்க வெச்சுடும்!
""இங்க பாருடா செல்லம்!.... நீ இது மாதிரி குறும்பு செய்யக்கூடாது!'' அப்படீன்னு உபாசா சொல்லிச்சு!
ஒரு நாள் ஆற்றங்கரைக்கு உபாசாவும், இண்டிக்குட்டியும் குளிக்கப் போனாங்க. இண்டி இங்கேயும், அங்கேயும் ஓடி விளையாடிக்கிட்டே இருந்திச்சு!
அப்போ இண்டி சேத்துலே மாட்டிக்கிச்சு! ""அம்மா!...அம்மா!.... என்னைக் காப்பாத்துங்க!'' அப்படீன்னு கத்துச்சு! உபாசா காப்பாத்தப் போச்சு! ஆனா, அதோட காலும் சேத்துக்கு உள்ளே போயிடுச்சு!
உடனே உபாசா, ""உதவி!.... உதவி!'' ன்னு கத்திச்சு! பக்கத்துலே ஒரு மரத்திலே இருந்த குரங்கு பாலு மாமா, சத்தம் கேட்டு ஓடி வந்திச்சு! பாவம் அதாலே எப்படி இந்த ரெண்டு யானைங்களைக் காப்பாத்த முடியும்? உடனே யோசிச்சு ஓடிப்போய் ஒட்டகச் சிவிங்கியை அழைச்சுக்கிட்டு வந்துச்சு!
ஒட்டகச் சிவிங்கி, ""கவலைப்படாதே, யானையக்கா!.... நாங்க காப்பாத்தறோம்!'' னு சொல்லிட்டு ஒரு நீளமான மரக்கிளையை உடைச்சி கொண்டு வந்து குட்டி இண்டியிடம் போட்டுச்சு!.... இண்டியும் உபாசாவும் அந்தக் கிளையை கெட்டியா பிடிச்சுக்கிட்டாங்க! இண்டியும் உபாசாவும் சேத்துலேயிருந்து வெளியே வந்துட்டாங்க!
அப்போ இண்டி, ""என்னாலேதானே இதெல்லாம்!.... மன்னிச்சுடுங்கம்மா!.... நான் உங்க பேச்சைக் கேட்காம தப்பு பண்ணிட்டேன்! இனி தப்பு பண்ணவே மாட்டேன்!'' அப்படீன்னு சொல்லிச்சு.
இண்டி இப்போ நல்ல பையனா மாறிடுச்சு! பாலு மாமா கிட்டேயும் மன்னிப்பு கேட்டுச்சு! உபாசா இண்டியைக் கட்டிப்பிடிச்சுக்கிச்சு!
இண்டி அம்மாவோட வாலைப் பிடிச்சுக்கிட்டு சந்தோஷமா சமத்தா காட்டுக்குள்ளே போச்சு!
நாம எல்லாரும் அம்மா பேச்சைக் கேப்போம்.