ஓர் ஊரில் முகிலன் என்று ஒரு சிறுவன் இருந்தான். அவனிடம் கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் இருப்பதைப் போலவே அழகான ஒரு கலைமான் இருந்தது. முகிலனுக்கு விணமீன்களைத் தொட வேண்டுமென்று மிகவும் ஆசை! அவன் அதைத் தன் அம்மாவிடம் சொன்னான்.
விண்மீன்களையெல்லாம் நம்மால் தொட முடியாது என்று அவன் அம்மா சொல்லிவிட்டார். முகிலனுக்கு ரொம்ப வருத்தமாகிவிட்டத.
முகிலனும், கலைமானும் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே இருந்தனர். முகிலன் ஒரு யோசனை சொன்னான்.
""விண்கலம் என்று ஒன்று இருக்கிறது. அதை வைத்து நாம் வானத்துக்குப் போகலாம்.... ஆனால் விண்கலத்துக்கு நாம் எங்கே போவது?.... '' என்று கேட்டான்.
""அப்படியா?.... அப்படியானால் நாமே அந்த விண்கலத்தைச் செய்யலாமே!'' என்றது கலைமான்.
அதற்கான பொருட்களைத் தேடி விண்கலத்தையும் செய்து முடித்த பின்னர்தான் முகிலனுக்கு நினைவு வந்தது!
""விண்கலத்திலிருந்து வெளியே செல்லாமல் விண்மீன்களைத் தொட முடியாதே!'' என்றான்.
அதனால் அந்த யோசனையை கைவிட்டு விட்டார்கள்.
மறுபடியும் யோசித்தனர். இப்போது கலைமான் ஒரு யோசனை சொன்னது.
""இரவு வானத்தில் பார்த்தால் மேகங்களுக்கு உயிர் இருக்கும். அவை இங்கேயும், அங்கேயும் நகரும்! அதில் ஏறிக்கொண்டால் நாம் வானத்திற்குப் போகலாம்!''
""சரி...''
அன்று இரவு வானத்தைப் பார்த்தார்கள். ஒரு மேகம் அவர்களைப் பார்த்து இறங்கி வந்தது.
முகிலன், "" எங்களுக்கு விண்மீன்களைத் தொடணும்!'' என்றான்.
""சரி,.... நான் உங்களை வானத்துக்குக் கூட்டிப் போகிறேன்!.... '' என்று சொன்னது மேகம்.
முகிலனும், கலைமானும் மேகத்தின் மேலே ஏறிக்கொண்டார்கள். நிறைய விண்மீன்கள் இருக்கும் இடத்துக்கு மேகம் அழைத்துச் சென்றது.
முகிலனுக்கு ஒரே மகிழ்ச்சி! அவன் ஒரு விண்மீனைத் தொட்டான்! "டிங்க்' என்று சத்தம் கேட்டது. அடுத்து ஒரு விண்மீனைத் தொட்டான். "பொய்ங்' என்று சத்தம் கேட்டது. இரண்டு மாறி, மாறித் தொட்டான்! "டிங் பொய்ங்' என்று சத்தம் கேட்டது. முகிலன் மகிழ்ச்சியாக விளையாடினான்.
கொஞ்ச நேரம் கழித்து, ""முகிலன், நாம் வீட்டிற்குப் போகலாம். அம்மா தேடிக்கிட்டிருப்பாங்க!'' என்று கலைமான் சொன்னது. இரண்டு பேரும் மேகத்தின் மேலே ஏறி வீட்டிற்குத் திரும்பி வந்தார்கள்.
அதிலிருந்து முகிலனும் கலைமானும் அவர்களுக்கு எப்போது விண்மீன்களைத் தொடணும் என்றாலும் மேகத்தின் மேலே ஏறிச் சென்று விண்மீன்களைத் தொட்டு விளையாடுவார்கள்.