ஓர் ஊரில் ஒரு காகம் இருந்தது. அதற்கு உணவுக்குப் பஞ்சமில்லை. கூடு கட்டி வாழ மரங்களுக்கும் பஞ்சமில்லை. அன்பு மிகுந்த சுற்றமும் நட்பும் இருந்தது. சந்தோஷமாக வாழ்ந்து வந்தது.
அந்தக் காகம் ஒரு நாள் கொக்கைப் பார்த்தது. அதன் வெண்மை நிறத்தைப் பார்த்து வியந்தது! தன் நிறம் கறுப்பாக இருக்கிறதே என்று வருத்தப்பட்டது!
""நீ கொடுத்து வைத்தவன்!... வெள்ளையாய் அழகாக இருக்கிறாய்!.... '' என்று கொக்கைப் பார்த்துப் புகழந்தது.
""வெண்மை என்ன வெண்மை?.... நான் ஒரு நாள் கிளியைப் பார்த்தேன்!......
அதன் பச்சை நிறம் என் கண்ணைப் பறித்தது!.... நான் பச்சையாக இல்லையே என்று வருந்,திக்கொண்டு இருக்கிறேனாக்கும்!'' என்றது கொக்கு.
இவை இரண்டும் பறந்து போய் கிளியைச் சந்தித்தன. கிளியின் நிறத்தைப் பாராட்டின!
கிளியோ, ""நான் ஒரு மயிலைப் பார்த்தேன்!..... என்ன அழகான தோகை?.....
அதன் அழகுக்கு முன் நாம் எம்மாத்திரம்?...'' என்று தன் கவலையை அவைகளுடன் பகிர்ந்து கொண்டது.
காகம், கொக்கு, கிளி மூன்றும் மயிலைச் சந்தித்தன. அதன் அழகைப் பார்த்து வியந்து பாராட்டின.
""இந்த அழகான தோகையால்தான் என் உயிருக்கே ஆபத்து!...... சிலர் இந்தத் தோகைக்காக என்னைக் கொல்லவும் தயங்குவதில்லை.... என் அழகுதான் எனக்கு ஆபத்தாக உள்ளது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்களுக்கு உங்கள் இறகுகளால் ஆபத்து ஏதும் இல்லை. '' என்றது மயில்.
காகம் கொக்கு, கிளி மூன்றும், ""இனி நாம் நம் நிறம் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. நம் நிறம் இயற்கை கொடுத்த வரம்! அதில் நாம் திருப்தி அடைவோம். இல்லாததை நினைத்து ஏன் ஏக்கப்பட வேண்டும்?....'' என்று மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டு மகிழ்ச்சியாக வாழத்தொடங்கின.