ஒரு குருவும் அவரது சீடர்களும் யாத்திரை சென்று கொண்டிருந்தனர். குருவிடம் சீடன் ஒருவன், ""சிலர் தினமும் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துகின்றனர்.... சிலரோ தெய்வ சிந்தனையே இல்லாமல் இருக்கின்றனர்.... எல்லோரும் இறைவனாலேயே படைக்கப்பட்டிருக்கின்றனர்.... இவர்களில் யாருக்கு கடவுளின் அருள் கிடைக்கும்?'' என்று கேட்டான்.
குரு, சிரித்துக்கொண்டே ""இதற்கு நான் பிறகு பதில் சொல்கிறேன்....'' என்று கூறி பயணத்தைத் தொடர்ந்தார். சீடர்களும் பின்தொடர்ந்தனர். மதிய வேளை.... அனைவருக்கும் பசியும் தாகமும் மேலிட்டது. அவர்கள் செல்லும் வழியில் ஒரு நதி ஓடிக்கொண்டிருந்தது. நதியில் ஸ்படிகம் போன்று நீர். அனைவரும் சிறிது அள்ளிப் பருகினர். பிறகு அருகில் பழுத்த பழங்களோடு ஒரு பெரிய மரத்தைக் கண்டனர். அனைவரும் அந்த மரத்தடிக்குச் சென்றனர். சில சீடர்கள் பழங்களைப் பறித்துக்கொண்டு வந்தனர். அனைவரும் உண்டு அந்த மரத்தின் நிழலிலேயே இளைப்பாறினர்.
அப்போது குரு, கேள்வி கேட்ட சீடனை நோக்கி, ""இந்த மரத்திற்கு எப்போதாவது நீ தண்ணீர் ஊற்றியிருக்கிறாயா?'' என்று கேட்டார்.
""இல்லை குருவே''
""பின் எப்படி உனக்கு இந்த நிழல் கிடைத்தது?''
""நிழல் தருவது மரத்தில் இயல்புதானே குருவே?''
""ஆம்!.... அது போலத்தான் கடவுளும்!''
""புரியவில்லை குருவே!''
""தன்னை வணங்குபவர் யார்.... வணங்காதவர் யார் என்றெல்லாம் கடவுள் பார்க்க மாட்டார்.... யார் யாருக்கு என்னென்ன தர வேண்டுமோ அதை அவர் தவறாமல் தருவார். அவருக்கு பாரபட்சம் இல்லை.... இந்த நதி எல்லா உயிர்களுக்கும் நீரைத் தருகிறது....இந்த மரமும் அனைவருக்கும், நிழலையும் பழத்தையும் தருகிறது! இந்த மரமும், நதியுமே அதற்கு சாட்சி! எனவேதான் நாம் மரங்களையும், நதிகளையும் தெய்வமாகப் போற்றுகிறோம்! நற்செயல்களைச் செய்பவர்களுக்கு இறைவனது அருள் நிச்சயம் உண்டு!...
வணங்குதல், வணங்காமல் இருத்தல் பற்றியெல்லாம் இறைவனுக்குக் கவலை இல்லை! ''
உணர்ச்சிப் பெருக்கில் சீடனின் கண்கள் பனித்தன.