கேள்வி: சூரியனும் ஒரு நட்சத்திரம்தான் என்கிறார்கள். அப்படியானால் சூரியன் மட்டும் பகலில் தெரிகிறதே? நட்சத்திரங்கள் பகலில் தெரிவதில்லையே? காரணம் என்ன?
பதில்: முதலாவது காரணம் சூரியன் நமக்கு நட்சத்திரங்களை விட அருகாமையிலும், அவற்றைவிட அதிகப் பிரகாச மாகவும் இருப்பதுதான்.
நட்சத்திரங்களும் சூரியன் இருக்கும் விண்வெளியில் தானே இருக்கின்றன. அவை பகலிலும் ஒளிர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அது நமக்குத் தெரியாமல் போவதற்குக் காரணம் சூரியனின் அளவுகடந்த பிரகாசமும் அருகாமையும்தான் காரணம். சூரியனின் ஒளியின் முன்பு நட்சத்திரங்களின் ஒளி மங்கிப் போய்விடுகின்றன அல்லது மறைந்து போய்விடுகின்றன.
சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி சிதறி நீலநிறமாக மாறி வானின் நிறமாக மாறி விடுகின்றது. வானின் இந்த நீல நிறமும் நட்சத்திரங்களின் ஒளியை மறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
நட்சத்திரங்களைப் பகலிலும் பார்க்க வேண்டுமானால் நீங்கள் நிலவுக்குக் குடிபோய் விட வேண்டும். நிலவுக்கு பூமியைப் போன்ற "அட்மாஸ்ஃபியர்' இல்லாததால் அங்கிருந்து, பகலிலும் நட்சத்திரங்கள் பளிச்சிடும் கோலாகலக் காட்சியைக் காணலாம்.
-ரொசிட்டா
அடுத்த வாரக் கேள்வி
குளிர்காலத்தில் நாமே வெடுவெடுவென்று நடுங்கு கின்றோமே, மென்மையான உடலைக் கொண்ட இந்தப் பறவைகள் எப்படிக் கடுங்குளிரைத் தாங்கிக் கொள்கின்றன?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.