பழங்களின் தேவதை - பப்பாளி மரம்!

நான் தான் பப்பாளி மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் காரிகா பப்பாயா என்பதாகும். நான் காரிகாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.
 பழங்களின் தேவதை - பப்பாளி மரம்!

மரங்களின் வரங்கள்!
என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா?
 நான் தான் பப்பாளி மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் காரிகா பப்பாயா என்பதாகும். நான் காரிகாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். என் பழம் அதிக ஊட்டச்சத்துகளைக் கொண்டு எல்லா காலங்களிலும், விலை மலிவாகவும், எளிதாகவும் கிடைப்பதால் நான் எல்லா மண் வகைகளிலும் வளரும் தன்மையன். எனது தாயகம் மெக்ஸிகோ. இந்தியா பப்பாளி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. உலகில் 42 சதவீதம் பப்பாளி இந்தியாவில் தான் உற்பத்தியாகிறது. "வீட்டுக்கு ஒரு பப்பாளி, இனி யாரும் இல்லை சீக்காளி' எனும் சொலவடை என் பெருமையை உணர்த்துகிறது.
 என் பழத்தில் விட்டமின் "சி' சத்தும் "ஏ' சத்தும் அதிகமாகவுள்ளது. மேலும், "பி1' (தயாமின்), "பி2' (ரிபோஃப்ளோவின்), "பி3' (நியாசின்), "பி5' (பான்டாதெனிக் அமிலம்) "பி6' (பைரிடாக்ஸின்), மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம் ஆகிய சத்துகள் உள்ளன. மேலும் என்னிடம் கார்போஹைட்ரேட்கள், புரதம், நார்ச்சத்து, நீர்ச்சத்து, ஃபோலட்டுகள் போன்றவையும் உள்ளன. இது பித்தத்தைப் போக்கும், கல்லீரல், கணையம், சிறுநீரக நோய்களை குணப்படும். இரத்த சோகைக்கும், புற்று நோய்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நான் சோரியாஸிஸ், முகப்பரு போன்ற சரும நோய்களுக்கு சிறந்த நிவாரணி, என் பழத்திலுள்ள பாப்பைன் நொதியானது சருமத்தில் உள்ள மாசுகளை நீக்குகிறது.
 என் இலையை மையாக அரைத்துத் தீப்புண்கள் மீது தடவினால், புண்கள் விரைவில் ஆறிவிடும். பப்பாளியில் காணப்படும் கைமோபாப்பைன் என்ற நொதியானது முடக்கு வாதம், கீல்வாதம் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும். பப்பாளியானது பொதுவாக உணவினை நன்கு செரிக்க செய்யும். அதாவது, என்னிடம் உள்ள பாப்பைன் என்ற நொதியானது புரதத்தினை உடைத்து செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் புரதமானது கொழுப்பாக மாற்றப்படுவது தடை செய்யப்படுகிறது.
 குழந்தைகளே, உங்களுக்குத் தெரியுமா, புரதச் சத்து நன்கு செரிக்கப்படாவிட்டால் அது வாதம், சர்க்கரை நோய் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட நோய்களை உண்டாக்கி விடும். என்னிடமுள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கிறது. மதிய இடைவேளையில் உணவாக உட்கொண்டு இதய நலத்தை பாதுகாக்கலாம்.
 என் பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும். மேலும், செரிமான மண்டலத்திலுள்ள கழிவுகளை வெளியேற்றி செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தும். வயோதிகத்தால் கண் தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மங்கலான பார்வை மற்றும் பார்வைக் குறைபாடு ஏற்படும், பப்பாளியில் உள்ள பீட்டா கரோடீன்கள் இந்த நோய் ஏற்படாமல் தடை செய்கிறது. தினமும் என் பழத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் கண் தசை அலர்ஜி நோய் ஏற்படுவது குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
 குழந்தைகளே, நெகிழியை ஒழிச்சிட்டாங்களாமே, ரொம்ப சந்தோஷம். நெகிழி மரங்களுக்கு எதிரி. அதனாலே மரங்களாகிய நாங்களெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா? குளிர்பானங்களை உறிய உறிஞ்சி (ஸ்டிரா) இல்லையே என வருந்துறீங்களா? கவலைப்படாதீங்க, என் இலைத் தண்டை ஒடித்தால் உங்களுக்கு உறிஞ்சி கிடைக்கும். அதை இளநீர் போன்ற பானங்கள் குடிக்க பயன்படுத்துங்க. என்ன சரியா ? என் பழத்தை அளவுக்கதிகமாக உண்ணாதீங்க. ஏன்னா, சில சமயம் அதிகமாக உண்டால் வாந்தி, வயிற்று வலி, குமட்டல் ஏற்படும். அளவோடு அடிக்கடி உணவில் சேர்த்தால் நல்ல செரிமானத்தை நான் கொடுப்பேன்.
 மரங்களைக் காப்போம், வளம் பல பெறும், ஆரோக்கியமாக வாழ்வோம். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
 (வளருவேன்)
 பா.இராதாகிருஷ்ணன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com