பாயசத்துக்கு திராட்சைக்கு பதிலாகப் பேரிச்சம் பழத்தைப் பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தைக் கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.
பாகற்காயுடன் உப்பு, மஞ்சள் தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியன சேர்த்து, அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்..
இட்லி பொடி தயாரிக்கும்போது ஒரு தேக்கரண்டி மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.
உருளைக்கிழங்கு வேக வைக்கும்போது, அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்க வேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன்இருக்கும்..
தக்காளி குருமா செய்யும்போது சிறிது வெங்காயத்தைப் பச்சையாக அறைத்து ஊற்றவும். குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.
துவரம் பருப்புக்குப் பதிலாகப் பொட்டுக் கடலையுடன், வர மிளகாய், பூண்டு, கொப்பரை தேங்காய் ஆகியன சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
இட்லிக்கு அரைத்த மாவில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய்விட்டு கலந்துவைத்தால், இட்லி மிருதுவாக இருக்கும்.
உளுந்து வடை செய்யும்போது ஒரு கைப்பிடி கொத்தமல்லித் தழையை சேர்த்து ஆட்டி செய்தால், நறுக்கிப் போட்டு செய்வதைவிட வாசனையாக இருக்கும்.
ரவா தோசை செய்யும்போது 2 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென சுவையாக இருக்கும்..
முதல் நாள் வாங்கிய கீரையை மறுநாள் பயன்படுத்தும்போது, கீரையின் வேர் பகுதி தண்ணீரில் இருக்குமாறு வைத்திருந்தால், கீரை மறுநாள் வரை வாடாமல் இருக்கும்.
தயிர் பச்சடி நீர்த்துப் போய்விட்டால், அதனுடன் சிறிது நிலக்கடலையை வறுத்து பொடியாக அரைத்து சேர்த்தால் பச்சடி கெட்டியாகிவிடும்.
குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால், தக்காளிப் பழத்தையோ அல்லது உருளைக் கிழங்கையோ வெட்டிப் போட்டு கொதிக்க வைத்தால் உப்பு குறைந்துவிடும்.
சாம்பார் செய்யும்போது, அதனுடன் ஒரு நெல்லிக்காயைச் சேர்த்துச் செய்தால், சாம்பாரின் சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.