சோளப்பொறி அல்லது கோதுமைப் பொறியில் காரம் கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சிறிது கட்டித் தயிர் கலந்து, காலை உணவாகச் சாப்பிட்டால் கொழுப்பில்லாத சத்துணவாகச் சுவையுடன் இருக்கும்.
முறுக்கை உடைத்து மிக்ஸியில் தூள் செய்து கூட்டு, பொறியலில் தூவினால் மிகவும் சுவையாக இருக்கும்.
சீரகம், மிளகு இரண்டையும் நெய்யில் போட்டு வதக்கி, பொடி செய்து 5 சிறிய வெங்காயத்தை நறுக்கிப் போட்டு வதக்கி உப்பு கலந்து சாதத்தைக் கலந்து வையுங்கள். ஜீரா சாதம் தயார்.
ரவா தோசை செய்யும்போது, இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்றாக இருக்கும்.
உளுந்துவடை செய்யும்போது, மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால் எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுவென்று இருக்கும்.
கேசரி, பால்கோவா, தேங்காய்ப் பர்ப்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால், அடி பிடிக்காமல் எளிதாகக் கிளறலாம்.
தேங்காய்த் துருவல் மீதியானால் அதை லேசாக வதக்கி, சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது, அரை கிண்ணம் தேங்காய்ப் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் சுவையாக இருக்கும்.
வெங்காய பகோடா செய்ய மாவு பிசையும்போது, வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசைந்தால், பகோடா ருசியாக இருக்கும்.
ஜாடியில் ஊறுகாய் போடும் முன்பு கொதிக்கும் எண்ணெயில் நனைத்த துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்து எடுத்த பின்பு, மூடினால் பூரணம் பிடிக்காமல் இருக்கும்.
அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து, சாப்பிடுவது உடல்நலத்துக்கு நல்லது.
வேப்பம்பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், ஜூரம் வராது.
பால் புளிக்காமல் இருக்க ஏலக்காயை காய்ச்சும்போதே சேர்த்தால், நீண்ட நேரம் பால் புளிக்காது.