ஹிந்தித் திரைப்படயுலகில் புகழ் பெற்று விளங்கிய ஜீனத் அமன், ""நடிக்க வந்ததே எதிர்பாராத விபத்து'' என்கிறார்.
மேலைநாட்டில் படித்து முடித்த ஜீனத் அமன், தனது தாய் மற்றும் ஜெர்மனிய வளர்ப்பு தந்தையுடன் இந்தியாவைவிட்டு கிளம்ப முடிவு செய்தார். அப்போது, எதிர்பாராத நிலையில் நடிகர் தேவ் ஆனந்தை சந்தித்துள்ளார். அப்போது அவர் தயாரித்துவந்த "ஹரே ராமா ஹரே கிருஷ்ண' படத்துக்காக நடிகையைத் தேடி கொண்டிருந்தார்.
ஜீனத் அமன் மேனாட்டு உடையுடன் பைப் பிடிக்கும் ஸ்டைலை பார்த்த தேவ் ஆனந்த் இவரை ஸ்கீரின் டெஸ்ட் எடுக்க விரும்பினார்.
தேர்வு செய்யப்பட்ட ஜீனத் அமன் வாழ்க்கையில் "ஹரே ராமா ஹரே கிருஷ்ண' படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற "தம் மரோ தம்' பாடல் காட்சியில் ஜீனத் அமனின் நடிப்பு ரசிகர்களைச் சுண்டி இழுத்தது.
அந்தப் பாடல் படத்துக்குத் தேவையில்லை என்று கருதினாலும், தேவ் ஆனந்தின் சகோதரரும், இயக்குநருமான விஜய் ஆனந்த் வற்புறுத்தலால் இடம்பெற்ற அந்தப் பாடலே படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
ஹிந்தி சரியாகப் பேச முடியவில்லை. முதன்முதலாக ஸ்கீரின் டெஸ்ட் எடுத்ததே ஆங்கிலத்தில்தான். இவரது தந்தை "மொகலே ஆஸம்', "பாகிஸா' போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர் என்றவர் என்றாலும், இவருக்கு ஹிந்தி உச்சரிப்பு சரியாக வரவில்லை. அவர் உயிருடன் இருந்திருந்தால் என்னை நடிக்கவே அனுமதி அளித்திருக்க மாட்டார் என்று ஜீனத் அமன் கூறுகிறார்.