மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 8 வயது சிறுமி அதாரா பெரெஸ்க்கு, ஐக்யூ அளவு மிக அதிகமாக உள்ளதாக சமீபத்தில் தெரிய வந்துள்ளது.
உலகின் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கிக்கும் ஐக்யூ 160 மட்டுமே உள்ள நிலையில், அதாராவுக்கு 162 இருப்பது தெரியவந்துள்ளது.
அதேசமயம், சிறுமிக்கு ஆஸ்பெர்கர்ஸ் (ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்) எனும் நோய் பாதிப்புக்கான அறிகுறி அவர் 3 வயதாக இருக்கும்போதே கண்டறியப்பட்டதுள்ளது. இந்த நோய் உள்ள நபர்கள் சமூக தொடர்புகளையோ அல்லது சொற்களையோ புரிந்து கொள்வதில் சிரமப்படுவார்கள். இதனால் பள்ளி செல்வதில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டார் அதாரா.
இருந்தாலும், சிறுமியின் புத்திசாலித்தனத்தை கவனித்த அவரின் தாய் சான்செஸ், சிறுமி அதாராவை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன்படி, மனநல மருத்துவரிடம் சோதனை செய்தபோதுதான் சிறுமி அதாராவிற்கு ஐக்யூ அளவு அதிகம் இருப்பது தெரியவந்தது.
இதன்பின்னர், சிறப்பு பள்ளியில் சேர்க்கப்பட்டு அதாரா தனது பள்ளிப் படிப்பைத் தொடர்கிறார். தொடர்ந்து இரண்டு ஆன்லைன் பட்டங்களையும் முடித்துள்ள அதாரா, "டூ நாட் கிவ் அப்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார். இதன்மூலம், ஃபோர்ப்ஸ் மெக்ஸிகோவின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் அதாராவையும் சேர்த்து உள்ளது.
இதுதவிர, மாற்றுத் திறனாளிகளின் உணர்ச்சிகளைக் கண்காணித்து விளைவுகளை முன்கூட்டியே தடுக்கும் வகையில் ஸ்மார்ட் பிரேஸ்லெட் ஒன்றை கண்டுபிடித்து வருகிறார். அது தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், அதாரா தனது கல்விக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார். அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வருகிறாராம்.