இளம் தலைமுறையினர், நடுத்தர வயதினர் மட்டுமே மலைச் சிகரங்கள் ஏறி சாதனை புரிவார்கள். ஆனால், 13 வயதில் சிறுமி முர்கி புலக்கிதா ஹஸ்வி ஆப்பிரிக்கா கண்டத்தில் தான்சானியா நாட்டில் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் உயரத்தில் இருக்கும் கிளிமஞ்சாரோ மலையின் உச்சிக்குச் சென்று வந்திருக்கிறார். இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்.
கிளிமஞ்சாரோ சிகரத்திற்கு சென்று வந்த கையுடன், "2024-ஆண்டுக்குள் உலகின் உயரமான மலைச் சிகரங்களில் ஆறு சிகரங்களில் வெற்றிகரமாக ஏறித் திரும்புவதுதான் எனது லட்சியம்' என்கிறார் முர்கி புலக்கிதா ஹஸ்வி.
"" சென்ற ஏப்ரல் மாதம் எவரெஸ்ட் சிகரத்தின் அடியில் இருக்கும் முகாமிற்குச் சென்று வந்தேன். அதன் பிறகு கிளிமஞ்சாரோ மலையில் ஏற பயிற்சியில் ஈடுபட்டேன். 2024-க்குள் மீதமுள்ள உலகின் உயரமான ஆறு மலைச் சிகரங்களில் எனது காலடி பதித்துத் திரும்ப வேண்டும். இதுதான் எனது லட்சியம்'' என்கிறார் முர்கி.