இன்றைய சூழ்நிலையில் தலையணை இல்லாத தூக்கம் என்பது பலருக்கும் மிகவும் கடினமான ஒன்று. தலையணை வைத்து உறங்குவது சுகமானதாக இருந்தாலும், அது நமது உடலுக்கு தீங்கானது என சொல்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.
சாயும்போதும், உட்காரும்போதும் ஏதேனும் ஒன்றை ஒத்தாசையாக வைத்து, அதில் ஒருவித சுகத்தைக் கண்டு, அப்படியே மிருதுவான தடிமனான பொருள்களைத் தலைக்கு வைத்துத் தூங்குவது வழக்கமாகியிருக்கிறது.
நாம் நடக்கும்போது எப்படி உடலை நேராக வைத்து நடக்கிறோமோ, அதுபோலவே உறங்கும் போதும், மேடு பள்ளம் இல்லாத சமமான தரையில் நேராகப் படுத்து உறங்க வேண்டும். அப்படிப்படுக்கும் போது, எக்காரணத்தைக் கொண்டும் குப்புறப்படுத்து உறங்கக்கூடாது. வானத்தைப் பார்த்துதான் தூங்க வேண்டும்.
மெத்தையில் படுப்பது, பஞ்சு நிரப்பிய மிருதுவான தலையணையை தலைக்கு வைப்பது ஆகியவற்றால், கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானம் அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் கழுத்து நரம்புகளும் பாதிக்கப்படும். அதனால், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு மூளை பாதிப்புகளில் தொடங்கி பலவிதமான பிரச்னைகளுக்கு அது வழிவகுக்கிறதாம்.
என்னால் தலையணை இல்லாமல் ஒருநாளும் தூங்க முடியாது என்பவர்கள், தலையணையை தலைக்கு மட்டும் வைக்காமல், தோள்பட்டையிலிருந்து தலை முழுவதற்கும் வைப்பது நல்லது.
நாம் தான் தலையணைக்கு அடிமையாகிவிட்டோம். அதனால், முடிந்தவரை தலையணை பயன்படுத்துவதைக் குறைத்து, தலையணை இல்லாமல் சமமான தரையில் உறங்க பழகிடுவோம்.