இட்லி மீந்துவிட்டால் வீணாக்காமல் அதனை உதிர்த்து ஏலக்காய்ப் பொடி போட்டு ஆவியில் வேகவிட்டு சர்க்கரையும், தேங்காய்த் துருவலையும் சேர்த்தால் இட்லி புட்டு தயார்.
வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து குலுக்கி வைத்தால் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான, சத்து நிறைந்த ஊறுகாய் ரெடி.
மிருதுவான ஆப்பம் கிடைக்க மாவு ஆட்டும் பொழுது தேங்காய்த்துருவல் மற்றும் வாழைப் பழத்தைச் சேர்த்து அரைத்து வைத்து ஆப்பம் வார்த்தால் சுவையான ஆப்பம் தயார்.
வாழைத்தண்டைப் பொடிப் பொடியாக நறுக்கி பக்கோடாவிற்கு கலந்து வைத்துள்ள மாவில் போட்டுப் பிசைந்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான வாழைத்தண்டு பக்கோடா கிடைக்கும்.
கொத்துமல்லி, புதினா துவையல் அரைக்கும்போது தண்ணீர்விடாமல் கொஞ்சம் தயிர்விட்டு அரைக்கவும். இதனால் துவையலின் நிறம் மாறாது. சுவையும் அபாரமாக இருக்கும்.
கோதுமை அல்லது மைதாமாவில் தோசை வார்க்கும்போது வெங்காயத்தை நறுக்கி நெய்யில் வதக்கி தோசையின் மேல் தூவவும் தோசை சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
தேங்காய் சட்னி அதிகமாகிவிட்டால், சிறிது புளித்த மோர், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, பொரித்த அப்பளங்களை உடைத்துப் போடுங்கள். சுவையான மோர்க்குழம்பு ரெடி.
இஞ்சியைத் துருவி வெயிலில் காய வைத்துப் பொடித்து வைத்துக் கொண்டால் டீ, குருமா, பொங்கல் என்று இந்தப் பவுடரைச் சேர்க்க மணத்துக்கு மணம். உடம்புக்கும் நல்லது.
வாழைக்காயின் காம்புப் பகுதியை தண்ணீரில் முழ்கும்படி வைத்தால் வாழைக்காய் மூன்று நாள்கள் வரை பழுக்காமல் இருக்கும்.
ரவா லட்டு செய்யும்போது சர்க்கரை சுவைக்கு கால் பங்கு பால் பவுடர் சேர்த்துக் கொண்டால் லட்டு சுவை பிரமாதமாக இருக்கும்.