விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ராஜா ராணி' சீசன் - 1 தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரித்திகா தமிழ். "குக் வித் கோமாளி சீசன் -2' நிகழ்ச்சி, சன் தெலைக்காட்சியில் ஒளிபரப்பான "சாக்லெட்' தொடர் போன்றவை இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. தற்போது "பாக்கியலட்சுமி' மற்றும் "திருமகள்' தொடர்களில் நடித்து வருகிறார்.
இவர், தனது சின்னத்திரை பயணம் குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
""நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூரில்தான். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்கிறேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே பகுதி நேரமாக கோயம்புத்தூரில் சில உள்ளூர் சேனல்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றினேன். இது தவிர, பிறந்தநாள் கொண்டாட்டம், கடைத்திறப்பு போன்றவற்றிற்கும் தொகுப்பாளராகவும் வேலை பார்த்துவந்தேன். இதற்கிடையில் அவ்வப்போதுமாடலிங்கும் செய்து வந்தேன்.
அந்த சமயத்தில்தான் "டிக்டாக்' பிரபலமடைந்து வந்த நேரம். அதில் நிறைய வீடியோக்களை பதிவிட்டேன். அதன்மூலம் தான் "ராஜா ராணி' தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நம்மை தேடி வரும் எந்தவொரு நல்ல வாய்ப்பையும் வாழ்க்கையில் தவறவிடக் கூடாது என்று நினைப்பவள் நான். எனவே, சீரியல் வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன்.
அந்தத் தொடரை தொடர்ந்து "குக் வித் கோமாளி', "சாக்லேட்' என தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. தற்போது "பாக்கியலட்சுமி', "திருமகள்' தொடர்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
என்னதான் நடிகையாக இருந்தாலும், எனது கனவு, லட்சியம் எல்லாம் ஆசிரியர் ஆக வேண்டும் என்பதுதான். அதுவும் பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழாசிரியர் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் ஆக வேண்டும். எம்.எஸ்.சி வரை முடித்திருக்கிறேன். மேலும், எம்.பில், பி.ஹெச் படிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது'' என்றார்.