மகளிர்மணி

கொழுப்பு சத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டாம்..

ப. வண்டார்குழலி

உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுப்பது, உள்ளுறுப்புகளுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பது, செல்களின் வளர்ச்சிக்கு உதவுவது, உயிர்ச்சத்துக்களான வைட்டமின் ஏ, டி, ஈ போன்றவற்றின் உட்கிரகித்தல் மற்றும் செயல்பாட்டை நிகழ்த்துவது, உடலின் வெப்பத்தை சமநிலையில் வைத்திருப்பது போன்ற உடலின் மிகவும் அடிப்படையான, அத்தியாவசியமான பணிகளுக்குக் கொழுப்புச் சத்து மிகவும் அவசியம். உணவு வழியாக எடுத்துக்கொள்ளும் கொழுப்பைத் தவிர்க்கும்போது, உடலுக்குத் தேவையான பிற நுண்சத்துகளும் குறைபாட்டை நோக்கிக் செல்கின்றன. 

நடுத்தர வயதுள்ள ஒரு நபருக்கு, 1800 கலோரி உணவு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நிலையில், கொழுப்பிலிருந்து கிடைக்கும் கலோரியானது,  மொத்த கலோரியில் 20 சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும். அதற்குக் கீழ் குறையுமானால், கொழுப்பில் கரையும் வைட்டமின்களான ஏ, டி, ஈ குறைபாடு ஏற்பட்டு, எலும்புகள் பலகீனமடைதல், தோல் நோய்கள், முடி உதிர்தல், கண் பார்வை மங்குதல், ஹார்மோன் பற்றாக்குறை, மன உளைச்சல் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்பளித்துவிடும்.  

ஆனாலும், சில அசாதாரண உடல்நிலைகளில் அல்லது நோய் நிலைகளில், கொழுப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர் கூறுவதைக் கேட்டிருப்போம். அதற்குப் பொருள், முற்றிலும் உணவில் சேர்த்துக் கொள்ளவே கூடாது என்பதல்ல. மாறாக, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அடர் கொழுப்பைக் குறைத்தும், நீக்கியும் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும், அனைத்து விதத்திலும் நன்மையளிக்கும் கொழுப்புணவுகளைக் கண்டறிந்து, அவற்றை நிர்ணயிக்கப்பட்ட அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே. 

அவ்வாறு பார்க்கும்போது, உடல் பருமன்,  உயர் ரத்த அழுத்தம், இதய நாள நோய்கள், கல்லீரல் நோய்கள், பித்தப்பை நோய்கள், பித்தப்பை நீக்கம், நாட்பட்ட கணைய அழற்சி போன்ற  நோய்கள் அல்லது உடல் நிலைகளில் கொழுப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலைகளில், அளவுக்கு அதிகமான கொழுப்பு அல்லது நோயாளியின் வயதுக்கேற்ற பரிந்துரைக்கப்பட்ட அளவு கொழுப்பும் கூட நோய் பாதித்த உறுப்பிற்கு சிரமத்தை ஏற்படுத்திவிடும். மேலும், ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரித்து பிற பிரதான உறுப்புகளையும் பாதிக்கும் என்பதன் காரணமாகத்தான் அவ்வாறு பரிந்துரைக்கப்படுகிறது. 

கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரான, பித்தப்பையில் சேமிக்கப்பட்டு, செரிமானத்தின்போது சிறிது சிறிதாக குடலுக்குக் கொடுக்கப்படுகிறது. 

பித்தப்பை அகற்றப்பட்டாலும்கூட, கல்லீரல் வெளியிடும் பித்தநீர், நேரடியாக செரிமானத்திற்குக் குடலுக்குக் கிடைக்கிறது. என்றாலும், கார்போஹைடிரேட் மற்றும் புரதம் எளிதில் செரித்துவிடுமளவிற்கு, கொழுப்பு விரைவாகவும், முழுவதுமாகவும் செரிப்பதில்லை. இதனால்தான், கொழுப்புணவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. 

ஆனாலும், குறைந்த அளவு கொழுப்புணவு செரித்துவிடுவதுடன் (குறிப்பாகத் தாவர வகைக் கொழுப்பு) அந்த உணவுடன் அவர்கள் எடுத்துக் கொள்ளும் பிற உணவுகளைப் பொருத்து, பின்னர் ஏற்படும் செரிமான சிக்கல்களும் தவிர்க்கப்படுகின்றன. 

பித்தப்பை அகற்றப்பட்டவர்களுக்கு, அடிக்கடி ஏற்படும் தொல்லைகளாக கொழுப்புணவு ஒவ்வாமை, குமட்டல், வாந்தி, வாயு வெளியேற்றம், செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மஞ்சள்காமாலை, வயிற்றுப்பகுதியில் வலி போன்றவை ஏற்படுவதுண்டு. இந்த பிரச்னைகளுக்குப் பயந்து கொண்டே, இவர்கள் கொழுப்புணவுகளான எண்ணெய் பொருட்கள், பால் பொருட்கள், அசைவ உணவுகள் போன்றவற்றை முற்றிலுமாக நிறுத்தி விடுகிறார்கள். 

இது நாளடைவில், உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டு, தோல் நோய்கள் வழியாகவே பெரும்பாலும் அறிகுறிகளை தெரியப்படுத்துகிறது. சிலருக்கு உடல் எடை குறைதல் மற்றும் கண்பார்வை மங்குதல் போன்றவை இருக்கும். இந்தப் பற்றாக்குறை நீடிக்கும்போது, பற்கள் தொடர்பான நோய்கள், பற்கள் ஒவ்வொன்றாக விழுதல், ஆண், பெண் என்று இருபாலருக்கும் மலட்டுத்தன்மை, முடி உதிர்தல், மன அழுத்தம், அடிக்கடி உடல் மற்றும் தசைப்பிடிப்புடன் வலி போன்றவை ஏற்படும். 

இவற்றையெல்லாம், பித்தப்பை அகற்றியதன் விளைவுகள் என்றே நினைத்துக் கொள்வதுடன், பயந்து கொண்டு, அதற்கான மருந்துகளை ஒருவித பதட்டத்துடன் எடுத்துக் கொள்கிறார்கள். இது மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.

கல்லீரல், பித்தப்பை மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கும், 25 - 40 கிராம் அளவு கொழுப்புச்சத்து பரிந்துரைக்கப்பட்டு இருப்பதால், ஏறக்குறைய 80 -90 சதவிகித கொழுப்புச்சத்தானது, கார்போஹைடிரேட் மற்றும் புரத உணவிலிருந்தே கிடைக்கு மாறு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்கள், கரையும் நார்ச்சத்துள்ள உணவுகளான சாத்துக்குடி, கொய்யாப்பழம், திராட்சை, ஆப்பிள், பீனஸ், பட்டாணி போன்றவற்றைத் தொடர்ச்சியாகவும், கரையாத நார்ச்சத்துள்ள உணவுகளான முழுதானியங்கள், கீரைகள், கொட்டையுணவுகள் போன்றவற்றை  குறைந்த அளவு அல்லது ஒருநாள் விட்டு ஒரு நாள் என்ற வகையிலும் எடுத்துக் கொள்வது நல்லது. 

ஏனெனில், இவை செரிப்பதற்குக் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வதால், வயிறு உப்புசம், வாயுக் கோளாறு, குமட்டல் இருப்பதுபோல் தோன்றும். ஆனாலும் இவற்றைத் தவிர்த்துவிடுதல் கூடாது. 

இதய நோய்களைப் பொருத்தவரையில், தீமை விளைவிக்கும் குறைவான அடர்வுள்ள கொழுப்புப் புரதமே, ரத்த நாளங்களில் படிமானங்களை சிறிது சிறிதாக உருவாக்கி அடைப்பை ஏற்படுத்திவிடுகிறது. எனவேதான் கொழுப்புணவுகளைக் குறைக்க வேண்டுமென பரிந்துரைக்கப்படுகிறது. 

இந்நோயாளிகளின் ரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவைப் பார்த்துக் கொண்டு, அதற்கேற்றவாறு தாவர வகைக் கொழுப்புணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். பித்தப்பை, கல்லீரல், கணையம், சிறுகுடல் நோய்கள் இருப்பவர்களுக்கு ஏற்படும் கோளாறுகள் போல் இவர்களுக்கு இல்லை என்பதாலும், 1800 - 2000 கலோரி உணவு எடுத்துக் கொள்பவர்களுக்கு, ஏறக்குறைய 60 - 70 கிராம் கொழுப்பு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாலும், இதய நோயுள்ளவர்கள் தாவர வகைக் கொழுப்புணவுகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. 

அதுவும், நார்ச்சத்துள்ள காய்கள், கீரைகள், பழங்கள், முழுதானியங்கள் போன்றவற்றுடன், பல்நிறைவுறாக் கொழுப்பும், ஒற்றை நிறைவுறாக் கொழுப்பும், ஒமேகா 3 கொழுப்பும் நிறைந்த  பாதாம், பிஸ்தா, வால்நட், ஆலிவ், மணிலா, எள், கொழுப்பு நீக்கப்பட்ட பால், சிறு மீன்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

குறைந்த அளவு கொழுப்புணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டவர்கள், வறுத்த பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட  உணவுகள், மசாலா சேர்த்த உணவுகள், சர்க்கரை, காபி, டீ, சாக்லேட், மது, குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.  

மேலும், அதிகக்  கொழுப்புள்ள பெரிய மீன்கள், அசைவ உணவுகள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். சீஸ் சேர்க்கப்பட்ட பீட்சா போன்ற அடர்த்தியான உணவுகள், பால் கிரீம், முட்டை, ஈஸ்ட் சேர்க்கப்பட்ட பேக்கரி உணவுகள் அதிக நேரம் வயிற்றிலேயே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி, அடுத்த வேளை உணவு எடுத்துக் கொள்வதற்குத் தடையாக இருக்கும். இது இரண்டு வகை நோயாளிகளுக்கும் பொருந்தும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT