பாலிவுட்டில் தற்போதைய பரபரப்பு செய்தி, காலஞ்சென்ற நடிகர்
ரிஷிகபூரின் மகனும், நடிகருமான ரண்பீர் கபூர் - ஆலியாபட் திருமணம்தான்.
இதுவரை இந்த தகவலை மறுத்துவந்த ரன்பீர் கபூர், இந்த ஆண்டில் எங்கள் திருமணம் நடக்கலாம் என்று தன்னுடைய முகநூலில் பதிவு செய்துள்ளாராம். இது குறித்து ஆலியா பட் சார்பில் மறுப்பு ஏதும் இல்லை.
என்றாலும், ஆலியாபட் தான் புதிதாக தொடங்கியுள்ள "எட் - எ - மம்மா' என்ற ஆயத்த ஆடை நிறுவன விற்பனையில் மும்முரமாக இருக்கிறார். 2 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கான ஆடைகளை சுற்றுச்சூழலுக்கேற்ப இயற்கையான நூலிழைகளைக் கொண்டு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். ஆடைகளுக்கு பிளாஸ்டிக் பட்டன்கள் கூட பயன்படுத்துவதில்லை. இந்த ஆடைகள் ஆறே மாதத்தில் 70 சதவீதம் விற்பனையாகி விட்டதாம்.
அடுத்து கோடை காலத்திற்கேற்ற உடைகளை வித்தியாசமான வடிவமைப்புகளில் தயாரிக்கும் மும்முரத்தில் உள்ள ஆலியாபட், இதில் கிடைக்கும் லாபத்தை அறக்கட்டளைகளுக்குக் கொடுத்து உதவுகிறாராம்.