இங்கிலாந்தில் துர்ஹாம் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் படிக்கட்டில் தடுமாறி விழுந்து சுய நினைவை இழந்த தாயைக் காப்பாற்றிய நான்கு வயது குழந்தையின் சாதனை சம்பவம் இது.
தன்னுடைய தாயார் மயக்கமடைந்து கிடைப்பதைக் கண்ட நான்கு வயது சிறுமி ஒன்றும் புரியாமல் அழுது தவிக்காமல், தொலைபேசியில் 999 என்ற அவசர உதவி அழைப்பு எண்ணில் கூப்பிட்டுள்ளார்.
எதிர் முனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும், தனது அம்மா தூக்கத்தில் இருப்பதாகவும், ஆனால் தலையில் இருந்து ரத்தம் வழிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள், சிறுமியின் குடும்பப் பெயரை கேட்டபோது, அது எனக்குத் தெரியாது. ஆனால் தனது செல்லநாயின் பெயர் மாக்ஸ் எனக் கூறியுள்ளார்.
அதையடுத்து தகவலைத் திரட்டிய போலீசார் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். போலீசாரை வீட்டினுள்ளே அனுமதித்த சிறுமி, அவர்களிடம் நடந்தவற்றை மீண்டும் சொல்லி இருக்கிறார்.
இதற்கிடையே மருத்துவ உதவிக் குழுவினர் விரைந்து வந்து, மயக்கமுற்றுக் கிடந்த சிறுமியின் தாயாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளித்து குணமடைய செய்துள்ளனர்.
அந்தப் பெண்மணி ஏலன் ஓ செல்டோனின் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்துவிட்டதால் அவர் படிக்கட்டு ஏறும்போது நிலைதடுமாறி விழுந்திருக்கிறார்.
""எனது மகள் மிலாடோபி மட்டும் அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றால் தற்போது நான் உயிருடன் இருந்திருக்கமாட்டேன்'' என கண்கலங்கக் கூறினார் தாய் ஏலன்.
இதற்கிடையே தொலைபேசியில் சிறுமியின் ஆறு நிமிட உரையாடலை துர்ஹாம் போலீசார் சமூக ஊடகங்களில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதே நேரம் அந்தச் சிறுமிக்கு போலீஸ் துறை சார்பில் துணிச்சலான செயல்பாட்டுக்கான விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
- கோட்டாறு. ஆ.கோலப்பன், நாகர்கோவில்.