கொல்லம் மாவட்டம். பத்தனாபுரம் ஊராட்சி அலுவலகத்தில் 2011முதல் பகுதி நேர துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்த ஏ.ஆனந்தவல்லி (46) உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று அவர் பணியாற்றிய அலுவலகத்திலேயே ஊராட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இவரது கணவர் மோகனன் மார்க்சிஸ்ட் கட்சியின் உள்ளுர் குழு உறுப்பினராக உள்ளார்.
இரு குழந்தைகளுக்குத் தாயான ஆனந்தவல்லி பிளஸ் 2 படிப்பை முடித்திருக்கிறார். கட்சியின் கிளைக்குழு உறுப்பினரான இவர் 2017 - ஆம் ஆண்டு வரை மாதம் ரூபாய் இரண்டு ஆயிரம் ஊதியத்திலும் பிறகு மாதம் 6 ஆயிரம் ஊதியத்திலும் பணியாற்றி வந்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற கேரள உள்ளாட்சித் தேர்தலில் பத்தனாபுரம் ஊராட்சிக்குட்பட்ட தலவூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
""நான் பகுதி நேர துப்புரவுப் பணியாளராக வேலை செய்யும் அலுவலகத்திலேயே உயர்ந்த பதவியை அடைவேன் என்று நினைத்துப் பார்த்ததில்லை. எனது வெற்றியால் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதலில் தேர்தலில் போட்டியிட எனக்குத் தயக்கம் இருந்தது. ஆனால் அதிகாரிகள் அளித்த ஊக்கமும், உதவியும்தான் தேர்தலில் போட்டியிட என்னைத் தூண்டியது.
பல திட்டங்களும் என்னிடம் உள்ளன. அலுவலக நடைமுறைகள் எனது பணிக்குத் தேவையானவற்றை தொடர்ந்து கற்று மக்களுக்கு சிறப்பாகப் பணியாற்றுவேன்'' என்றார்.