பெரியதிரையில் வாய்ப்புகள் குறைந்த போது, சின்னத்திரையில் இருந்து வந்த வாய்ப்புகளை எல்லாம் வேண்டாம் என்று தவிர்த்து வந்த நடிகை கஸ்தூரி , நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் "அக்னி நட்சத்திரம்' தொடரில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் களமிறங்கியிருக்கிறார்.
இது குறித்து கஸ்தூரி கூறுகையில், ""அக்னி நட்சத்திரம்' தொடர், முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய கதைக் கரு. பெண்களின் பிரச்னைகளையும், பாதுகாப்பும் குறித்து பேசுகிற தொடர். அதனால் இத்தொடரின் கதை எனக்குப் பிடித்திருந்ததால், இதில் நானும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டேன். இதுபோன்ற கதாபாத்திரம் பெரியத்திரையில் வந்தாலும் நிச்சயம் நடிப்பேன்'' என்றார்.
நிழல் நிஜமாகிறது!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "பூவே பூச்சூடவா' தொடரில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மாவும், அத்தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்து வந்த மதனும் காதல் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர். இந்தத் திருமணத்துக்கு இரண்டு பேரின் வீட்டிலும் பெரியவர்கள் சம்மதமும் கிடைத்து விட்டது. இது குறித்து ரேஷ்மா கூறுகையில், பிறந்திருக்கிற இந்த 2021 புத்தாண்டு என்னுடைய வாழ்க்கையில் ரொம்பவும் ஸ்பெஷலான வருஷமாகியிருக்கிறது. இதுவரை ரீல் லைப் ஜோடியாக இருந்த நானும் மதனும் தற்போது ரீயல் லைப் ஜோடியாக மாறப் போகிறோம். எங்களை புரிந்து கொண்டு எங்கள் இருவீட்டிலும் இதற்கு சம்மதம் கொடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. விரைவில் எங்கள் திருமண தேதியை அறிவிக்க உள்ளோம். இதுவரை எங்களுக்கு ஆதரவு அளித்து வந்த ரசிகர்களின் அன்பும், வாழ்த்தும் எங்களுக்கு நிச்சயம் வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
- ஸ்ரீ