குளிர்காலம் தொடங்கியாச்சு. இந்தக் காலகட்டத்தில் ஏற்படும் கடும் குளிரிலிருந்து காத்துக் கொள்ள நாம் என்னென்ன முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும். பார்க்கலாம்:
குளிர்காலங்களில் சுற்றுப்புறச்சூழலின் வெப்பம் குறைவாக இருப்பதால் உடலில் ஜீரண சக்தி குறைவாக இருக்கும். அதனால் நாம் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். உடல் வெப்பத்தை தக்க வைக்கும் உணவுகளை உண்பதன் மூலம் உடலை குளிர்காலத்திற்கு ஏற்ற வகையில் வைத்துக் கொள்ள இயலும்.
குளிர்காலத்தில் சாப்பிட வேண்டியவை
குளிர்காலங்களில் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் அவதிப்பட நேரிடலாம். பாக்டீரியா மற்றும் வைரஸ்களினால் பரவும் நோய்களை எதிர்க்கும் சக்தி பூண்டில் உள்ளது. இதனால், குளிர் காலத்தில் தொண்டைகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு 2-3 பூண்டு பற்களை சுட்டு மென்று விழுங்குவதன் மூலம் தீர்வு காண முடியும்.
குளிர்காலங்களில் உணவில் தேனை சேர்த்து கொள்வது மிகச்சிறந்த ஒன்றாகும்.இது ஜீரண சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்த உதவும்.
குளிர்காலங்களில் சரியான உணவுமுறையை உட்கொள்வதற்கும் தேவையான பிராணவாயுவை பெறுவதற்கும், வேர்க் கடலையை சிறிதளவு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
பாதாம் பருப்பு அதிகளவில் பலன் தரக்கூடியது. இதன்மூலம் குளிர்காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க முடியும்.
நீர்ச்சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், வெள்ளரி போன்ற காய்கறிகளை குறைந்த அளவிலே சாப்பிடவும்.
காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.
இரவு தூங்குவதற்கு முன்பு பசும் பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இதனால், ஜலதோஷம் தொடர்பான பிரச்னைகள் வராது.
சாப்பிடக்கூடாதவை :
உணவில் இனிப்பு அதிகம் சேர்த்து கொள்ளக்கூடாது.
எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது.
இரவு உணவில் பச்சைப் பயிறு, கேழ்வரகு ஆகியவற்றை சேர்க்க வேண்டாம்.
சிலருக்கு மழைக்காலத்தில் எலுமிச்சை பழம் மற்றும் ஆரஞ்சு ஜுஸ் பருகினால் ஒத்துக்கொள்ளாது. அதனால், பருகாமல் இருப்பது நல்லது.
மழைக்காலங்களில் இரவில் கீரை வகைகளை சாப்பிடக்கூடாது.
பால், தயிர், வெண்ணெய் மற்றும் நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக்கூடாது.