விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த "குக் வித் கோமாளி சீசன் - 2' நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் கார்த்திகா (எ) கனி, பாபா மாஸ்டர், அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக பங்கேற்றனர். இவர்களுடன் சிவாங்கி, பாலா, புகழ், சரத், மணிமேகலை உள்ளிட்டோர் கோமாளிகளாக துணை நின்றனர்.
போட்டியின் முடிவில் கனி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூபாய் 5 லட்சம் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது. தற்போது ஆடை வடிவமைப்பாளராக இருந்து வரும் கனி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஷகீலா இரண்டாவது இடமும், அஸ்வின் 3-ஆவது இடமும் பிடித்தனர்.
இந்நிலையில், "குக் வித் கோமாளி சீசன் -3' நிகழ்ச்சி வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கு சந்தேகமே வேண்டாம் நிச்சயம் வரும். ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வரும். கோமாளிகள் பெரும்பாலும் இவர்களாக தான் இருப்பார்கள். குக்ஸ் மட்டும் "பிக்பாஸ்', சீரியல் நட்சத்திரங்கள் என்று வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று தெரிவிக்கிறது சின்னத்திரை வட்டாரம்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சித்தி - 2' தொடரில் வில்லி கலந்த நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் உமா பத்மநாபன். இத்தொடரில் இதுவரை நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வந்த இவரது கதாபாத்திரம் தற்போது பாஸிட்டிவாக மாறியுள்ளது.
அவர் கூறுகையில், ""எனக்கு சீரியஸான கதாபாத்திரத்தைவிட நகைச்சுவை கலந்த காமெடி கதாபாத்திரங்களே ரொம்ப பிடிக்கும். காரணம், இயல்பாகவே, என்னிடம் காமெடி சென்ஸ் அதிகம் இருப்பதாக உணர்கிறேன். இந்தத் தொடருக்கு பிறகு, திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தலாம் என்று இருக்கிறேன்.
தற்போது 4 திரைப்படங்களில் நடித்து வருகிறேன். குறிப்பாக, நகைச்சுவை சார்ந்த நடிப்புகளை வெளிப்படுத்தும் திரைப்படங்களை தேர்வு செய்ய வேண்டுமென விரும்புகிறேன்'' என்றார்.