கல் தோடில் எண்ணெய் இறங்கி விட்டால், அதை ஒரு வெள்ளைத் துணியில் குப்புற வைத்து, அந்த வெள்ளைத் துணியை ஒரு இட்லிப் பாத்திரத்தில் வைத்து 15 நிமிடங்களுக்கு ஆவியில் வைத்தால், தோடில் இறங்கியிருந்த எண்ணெய் முழுவதும் துணியில் இறங்கிவிடும்.
தங்க நகைகள் அழுக்கடைந்து விட்டால் ஏதேனும் பற்பசையைத் தடவி ப்ரஷால் தேய்த்தால் அழுக்கெல்லாம் நீங்கி நகைகள் புதிதுபோல மின்னும்.
கண்ணாடி டம்ளர்கள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து எடுக்க வராவிட்டால், கீழ் டம்ளரை கொதிநீரில் வைத்து, மேலுள்ள டம்ளரில் மிகக்குளிர்ந்த நீர் ஊற்றி சிறிது நேரத்தில் மேல் டம்ளரை இழுத்தால் எளிதாக வந்துவிடும்.
புத்தக பீரோவில் புகையிலைத் துண்டுகளைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
தூபக்காலில் நெருப்புத் துண்டங்களைப் போட்டு அதன் மீது கிராம்புத்தூளைத் தூவவும். அந்த புகைக்கு ஈக்கள் ஓடிவிடும்.
வாஷ் பேசின் அடைத்துக்கொண்டால் அரை கப் வினீகரில் 2 ஸ்பூன் சமையல் சோடா கலந்து வாஷ் பேசினின் துவாரங்களில் ஊற்றவும். அரை மணி நேரம் கழித்து கொதிக்கும் வெந்நீர் 1 லிட்டர் அதில் ஊற்றவும். அடைப்பு நீங்கி விடும்.
ஊதுவத்திகளை ஏற்றுவதற்கு முன் நீரில் நனைத்து பின்பு காற்றில் உலரவிட்டு ஏற்றினால், அதிக மணமாகவும் இருக்கும் நன்றாகவும் எரியும்.
பட்டுச் சேலைகளைத் துவைக்கும்போது அலசும் நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் சாயம் போகாது; மங்காது. பட்டுச் சேலையும் பளிச்சிடும்.