காலை மூன்று மணி முதல் ஐந்து மணிக்குள் தீபமேற்றுவது வீட்டில் சர்வ மங்கள யோகத்தை உண்டாக்கும்.
குத்து விளக்கு மூம்மூர்த்தி சொரூபம் ஆகும்.
வெள்ளி விளக்குகளை பயன்படுத்துவது மிகவும் விசேஷம்.
மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கினை தினந்தோறும் புதிதாகப் பயன்படுத்துவது பொன் விளக்கை பயன்படுத்துவதற்கு சமம்.
பித்தளை, தாமிரம், வெண்கலம் முதலிய கலப்பு உலோகங்களாலான விளக்குகளைப் பயன்படுத்தலாம். இந்த விளக்குகளை வாரம் ஒரு முறையாவது தேய்த்து துடைத்து பூவும், பொட்டும் இட்டு விளக்கேற்ற வேண்டும்.
பீங்கான் விளக்கை மட்டும் பயன்படுத்தவே கூடாது.
குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றுவது மத்திமம். இரண்டு முகங்களில் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை பெருகும். மூன்று முகம் ஏற்ற புத்திர சுகம் கிடைக்கும். நான்கு முகங்களை ஏற்ற கால்நடைச் செல்வம் பெருகும். ஐந்து முகங்களையும் ஏற்றினால் செல்வ வளம் செழிக்கும்.
விளக்கை வடக்குத் திசையில் ஏற்றி வழிபட்டால் நிறைவான பொருள் வசதி கிடைக்கும். திருமணத்தடை நீங்கும். அறிவு வளர்ச்சியடையும். விளக்கை கிழக்கு திசையில் ஏற்றி வழிபட்டால் துயரங்கள் அனைத்தும் விலகும். மேற்கு திசையில் விளக்கு ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையை நீக்குவதோடு விரோதங்களையும் போக்கும். ஆனால் எந்த நிலையிலும் தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றுதல் கூடாது.
திருக்கார்த்திகை தினத்தன்று வீட்டில் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும்.
தீபச் சுடரில் மகாலட்சுமி வாசம் செய்வதால் தீபம் ஏற்றியதும் வணங்க வேண்டும்.
வீட்டில் விளக்கேற்றி வழிபடும் போது பஞ்சால் திரியிடுவதே மிகவும் சிறப்பானது. தாமரைத் தண்டைத் திரித்து ஏற்றினால் முன்வினை பாவம் நீங்கும்.
வெள்ளெருக்கு பட்டையைத் திரியாக்கிப் போட்டால் செல்வம் விருத்தியாகும்.
புதுச் சிவப்பு சேலைத் துண்டினைத் திரியாக்கி ஏற்றினால் திருமணத் தடை விலகுவதுடன் புத்திரப் பேறும் கிடைக்கும். மஞ்சள் சேலைத் திரியினால் அம்பாள் அருள் கூடுவதுடன் மனப்பிரமையும் நீங்கும்.
காமாட்சி விளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் தேய்ப்பது நல்லது. இதற்குக் காரணம் திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதும நிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கைத் தேய்த்தால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதிகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதி நிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே, வெள்ளிக்கிழமை தேய்க்காமல் வியாழக்கிழமை தேய்ப்பது நல்லது.
விளக்கை வாயால் ஊதி அணைக்கக் கூடாது. துளி பாலை விரலில் தொட்டு எரியும் தீபத்தின் வலது, இடது பக்க விளக்கு விளம்பில் தேய்த்துவிட்டு சாந்த சொரூபியே நமஹ என்று சொல்லிவிட்டு பூவால் குளிர வைக்க வேண்டும். பூவும் கருகக் கூடாது. அல்லது திரியை வலப்பக்கமாக திருப்பி உள்ளே இழுத்து எண்ணெய்யில் குளிர வைக்க வேண்டும்.