இந்திய விமானப்படை: முதல் பெண் அதிகாரி!
அண்மையில் 96- ஆவது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களுரில் தன்னுடைய மகள் சுகன்யாவின் வீட்டில் காலமான விங் கமாண்டர் (ஓய்வு) விஜயலட்சுமி ரமணன், முதன்முதலாக இந்திய விமானப்படையில் சேர்ந்த பெண் அதிகாரி ஆவார்.
பிப்ரவரி 27, 1924- ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த விஜயலட்சுமி, 1943- ஆம் ஆண்டு மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எம்.பி.பி.எஸ் படிக்கும்போது, 1948-ஆம் ஆண்டு சிறந்த மாணவியாக விளங்கிய இவர் மருத்துவத்தில் பால்ஃபோர் நினைவு பதக்கத்தையும், அறுவை சிகிச்சையில் மெட்ராஸ் யூனிவர்சிடி விருதையும் பெற்றார். மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவத்தில் எம்.டி பட்டம் பெற்ற இவர் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் உதவிசர்ஜனாக பணியாற்றி வந்தார்.
ஆகஸ்ட் 22, 1953- ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி வந்தபோது கணவர் ரமணன் பிரிந்துரையின் பேரில், ராணுவ மருத்துவமனையில் பணியில் சேர்ந்த விஜயலட்சுமி, அன்றைய தினமே இந்திய விமானப் படையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்திய விமானப்படையின் முதல் பெண் அதிகாரியான இவர் பெங்களூரு ஜலஹள்ளி, கான்பூர், செகந்திரபாத் விமானப்படை மருத்துவமனைகளில் பணியாற்றியதோடு, மருத்துவவாரியத்தில் நிர்வாகம், குடும்ப கட்டுப்பாடு மற்றும் செவிலியர் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வந்தார்.
1962, 1966 மற்றும் 1971-ஆம் ஆண்டு யுத்தங்களின்போது காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு சிறப்பான மருத்துவம் பார்த்ததற்காக நிரந்தர அதிகாரியாக நியமிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு, 1977-ஆம் ஆண்டு "விஷிஷத் சேவா' மெடல் வழங்கப்பட்டது. அதே ஆண்டில் விங் கமாண்டராக ஓய்வுப் பெற்ற இவரது கணவர் ரமணன் காலமானார். பின்னர் விஜயலட்சுமியும் 1979- ஆம் ஆண்டு விங் கமாண்டராக பணியிலிருந்து ஓய்வுப் பெற்றார். இந்திய விமானப் படையில் பணியாற்றிய முதல் தம்பதியர் என்ற சிறப்பும் இவர்களுக்கு கிடைத்தது.
மருத்துவராவதற்கு முன்பே 15வயது முதலே கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சிப் பெற்றிருந்த இவர், அகில இந்திய வானொலியில் கலைஞராக தில்லி, லக்னௌ, செகந்திராபாத், பெங்களூரு வானொலி நிலையங்களில் கச்சேரிகள் நடத்தியுள்ளார். ஓய்வு பெற்றபின் பெங்களூரு அல்சூரில் தனிமையில் வசித்து வந்த இவர், உடல்நலக் குறைவு காரணமாக ஜெயநகரில் உள்ள மகள் சுகன்யா வீட்டிற்குச் சென்றவர் சிகிச்சை பலனின்றி காலமானார். கடைசிவரை தன்னுடைய தேவைகளை தானே கவனித்துக் கொண்டதாக அவரது மகள் சுகன்யா கூறினார்.
-அ.குமார்
முதல் திருநங்கை!
அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை சாரா மெக்பிரைட். அந்நாட்டின் செனட் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தின் செனட் அவை உறுப்பினராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹாரிஸ் மெக்டோவல் கடந்த 44 ஆண்டுகளாக இருந்தார். எனினும், "தேர்தலில் தொடர்ந்து போட்டியிட விரும்பவில்லை' என்று அவர் அறிவித்தார்.
அதையடுத்து தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் வழக்குரைஞரும் திருநங்கையுமான சாரா மெக்பிரைட் போட்டி யிட்டார். அத்தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்டீவ் வாஷிங்டனை அவர் தோற்கடித்தார். இதன் மூலமாக , அமெரிக்க செனட் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் திருநங்கை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
தேர்தலில் பெற்ற வெற்றி குறித்து கருத்து தெரிவித்த சாரா மெக் பிரைட், "நினைத்ததைச் செய்து முடித்துவிட்டதாக' தெரிவித்தார்.
- கோட்டாறு ஆ.கோலப்பன்