முன்னேறிய நாடுகள் தங்களை பெண்களுக்கு சம உரிமை தரும் சமூகம் என அழைத்துக் கொண்டாலும், தேசபிதா என ஆண்களைத்தான் கொண்டாடி இருக்கின்றன. தேசத்துக்காக போராடிய எந்த பெண்ணையாவது தேசத்தின் அன்னை என அழைத்திருக்கின்றதா எனத் தேடிப் பார்த்தால் அந்த பெருமையை ஐக்கிய அரபு அமீரகம் என்கிற இஸ்லாமிய நாடுதான் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
சையது பின் சுல்தான் அல் நஹ்யான் என்பவர்தான் ஐக்கிய அரபுக் குடியரசின் முதல் மன்னர். அவரது மனைவி பாத்திமா பின்ட் முபாரக் அல்கெட்பி தான் இந்த சிறப்புக்குரியவர். இவர், மன்னரின் மனைவி என்பதால் அன்னை என்று அழைக்கவில்லை.
அரபு நாடுகளின் மிக முக்கியமான பெண்ணுரிமைப் போராளி இவர். பெண்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்று போராடியவர். அதுபோன்று, அரபு நாடுகளின் தேசிய சபையில் கண்டிப்பாக பெண் உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும் என்றும் குரல் கொடுத்து வருகிறவர். அபுதாபி பெண்கள் சபை, பெண்கள் பேரெழுச்சி மன்றம் மற்றும் பெண்கள் கல்வி உரிமைக் கழகம் ஆகிய அமைப்புகளைத் தோற்றுவித்தவர்.
யுனெஸ்கோ விருது, உலக சுகாதார அமைப்பின் விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற பாத்திமாவின் பெயராலும் விருதுகள் வழங்கப்படுகின்றன. சூழலியலுக்காக பங்களிக்கின்ற பெண்கள் மற்றும் தடகள வீராங்கனைகளுக்கு இவரது பெயரால் விருதுகள் தரப்படுகின்றன. ஐக்கிய அரபு அமீரக நாடு இவரை "தேசத்தின் அன்னை' எனக் கொண்டாடுகிறது.