அமெரிக்காவில் ஆண்டுதோறும் "3எம் இளம் விஞ்ஞானி' போட்டி நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் கண்டுபிடிப்புகளை சமர்ப்பிக்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த இளம் விஞ்ஞானி போட்டியிலும் பலர் கலந்து கொண்டனர். அதில் வெற்றிபெற்ற 10 பேரில் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான அனிகா செப்ராலும் ஒருவர்.
இவர், உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரûஸக் கட்டுப்படுத்தும் மூலக்கூறு ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
அதாவது, கரோனா வைரஸின் மேல்பகுதியில் முள் போன்ற அமைப்பு ஒன்று காணப்படுகிறதல்லவா, இது புரதத்தால் ஆனது. இதன் மூலம்தான் வைரஸ் கிருமி நமது உடலுக்குள் நுழைகிறது. நாம் சோப்பு போட்டு கை கழுவும் போது, வைரஸின் மேல் பகுதியில் இருக்கும் இந்த முள் போன்ற புரத பகுதி சிதைந்து விடும். எனவேதான், நாம் கைகளை அடிக்கடி சோப்புப் போட்டு கழுவ வேண்டும் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
அந்த வகையில், சார்ஸ் -கோவிட்-2 வைரஸ்ஸில் உள்ள ஸ்பைக் புரதத்தின் மூலக்கூறை உடைப்பதற்கான முறையை இவர் உருவாக்கியுள்ளார். இது கரோனாவை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவும் என்பதால் இவர், போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
இது குறித்து அனிகா செப்ரால் கூறியதாவது:
""அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. "3எம்' அறிவியல் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அவர்களின் உதவி மூலம், எனது கண்டுபிடிப்பை மேலும் மேம்படுத்த முடியும் என்று நம்புகிறேன். கரோனா பாதிப்பை குணப்படுத்த வலுவான மருந்தை கண்டுபிடித்து, நோய்த் தொற்று பரவல் மற்றும் உயிரிழப்பை கட்டுப்படுத்த போராடிவரும் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுவதுதான் எனது அடுத்த இலக்கு'' என்று அனிகா கூறியுள்ளார். இதற்காக இவருக்கு, 18 லட்சம் பரிசுத் தொகையுடன், "3எம்' ஆராய்ச்சியாளர்களின் கல்வி வழிகாட்டுதலைப் பெறும் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.