அண்மையில் வெளியான "மிஷன் மங்கள்' படத்தில் நடித்துள்ள நித்யாமேனன், அமேசான் பிரைம் தயாரித்து வரும் "ப்ரீத் -2' என்ற வெப் சீரியலில் நடித்து வருகிறார். முதல் பகுதியில் மாதவனுடன் நடிக்கும் நித்யா மேனன், இரண்டாவது பகுதியில் அபிஷேக் பச்சனுடன் நடிக்கவுள்ளார். ""இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வெப் சீரியலில் நடிப்பது பிடித்துள்ளது. இது என்னுடைய அமைதியான தனிமை இடம். நடிகை என்ற முறையில் சுதந்திரமாக நடிப்பது எனக்கு புது அனுபவமாகவும் உள்ளது'' என்கிறார் நித்யா மேனன்.
வெப் சீரியலில் அக்ஷரா ஹாசன்
""இன்றைய நவீன வாழ்க்கையில் பலருக்கும் எந்நேரமும் செல்போனையோ, சமூக வலைதளங்களையோ பார்ப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இன்றைய வாழ்க்கைக்கு அவை தேவை என்றாலும் தொடர்ந்து விரல்நுனியில் அவைகளை பயன்படுத்துவதை தவிர்த்து, மனிதர்களுடன் கலந்து உறவாடுங்கள்'' என்று கூறும் அக்ஷரா ஹாசன் இந்த கருத்தை அடிப்படையாக கொண்டு தமிழில் ஐந்து பகுதிகள் கொண்ட "ஃபிங்கர் டிப்' என்ற வெப் சீரியலில் நடித்துள்ளார். ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் பற்றி சமூக வலைதள திகில் தொடரான இதை ஷிவாகர் இயக்க, விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டும் ஜெனிலியா
குறும்புத்தனமான பாத்திரங்களில் நடித்து பிரபலமான ஜெனிலியா டிசாசோ, ரித்திஷ் தேஷ் முக்கை திருமணம் செய்து கொண்ட பின்னர் குழந்தைகள், குடும்பம் என்று ஒதுங்கியிருந்தார். கடைசியாக 2018 -ஆம் ஆண்டு வெளியான மராத்திப்படம் "லாய் பஹாரி'யில் நடித்தவர். இந்தியில் "போர்ஸ் -2' படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றினார். தற்போது மீண்டும் நடிக்க ஆர்வமுள்ள ஜெனிலியா, மராத்தி படமொன்றிலும், வெப் சீரியல்களிலும் நடிக்க கதைகளை கேட்டு வருகிறாராம்.
நடிகையான பிசியோதெரபிஸ்ட்
கன்னடத்தில் கிச்சா சுதிப் நடிக்கும் "பயில்வான்' என்ற படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்படவுள்ளது. இதில் அறிமுகமாகியுள்ள ஆகன்ஷா சிங் ஏற்கெனவே இந்தியில் "பத்ரிநாத் கி துல் ஹானியா' என்ற படத்தில் துணை நடிகையாக நடித்திருந்ததால், "பயில்வான்' இந்தி டப்பிங்கில் அவரே பேசி நடித்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் "கிளாப்' என்ற படத்தில் தேசிய ஹாக்கி வீராங்கனையாக நடிக்கும் ஆகன்ஷா, நடிக்க வருவதற்கு முன் பிசியோதெரபிஸ்ட்டாக பணியாற்றி வந்தாராம்.
டீன் ஏஜ் நினைப்பில் அனன்யா பாண்டே
பாலிவுட் நடிகர் சங்க்கி பாண்டே மகளான அனன்யா பாண்டே "ஸ்டூடண்ட் ஆப் தி இயர் -2' படத்தின் மூலம் அறிமுகமானார். ""நடிகர் குடும்பத்தில் பிறந்ததால் சிறுவயது முதலே திரையுலகில் பிரபலமானவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தயாரிப்பாளர் கரண் ஜோகர் மூலமாக சுலபமாக சினிமாவில் நடிக்க முடிந்தது. தற்போது "பதி பத்னி அவுர் வோ' படத்தின் ரீமேக்கில் கார்த்திக் ஆர்யனுடன் நடித்தாலும், இன்னமும் நான் என்னை டீன் ஏஜ் பெண்ணாகவே உணர்கிறேன்'' என்று கூறுகிறார் அனன்யா பாண்டே
மீண்டும் சூர்யாவுடன் காஜல் அகர்வால்
2016-ஆம் ஆண்டு வெளியான "தோ லப்சான் கி கஹானி' என்ற இந்தி படத்தில் நடித்த காஜல் அகர்வால், சஞ்சய் குப்தாவின் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் "மும்பை சகா' என்ற இந்தி படத்தில் முதன்முறையாக ஜான் ஆபிரகாமுடன் ஜோடியாக நடிக்கிறார். கூடவே, "மாற்றான்' படத்தில் சூர்யாவுடன் ஜோடியாக நடித்த காஜல் அகர்வால், மீண்டும் "விஸ்வாசம்' பட இயக்குநர் சிவாவின் அடுத்த படத்தில் சூர்யாவுடன் மீண்டும் ஜோடியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் துவங்கவுள்ளது.