துணிவு இவரது அடையாளம்! 

சி.ஆர்.பி.எப்பின் ஒரு பகுதியான கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசலியூட் ஆக்ஷன் (COBRA) பிரிவினர், ஆள் நடமாற்றம்மில்லாத அடர்ந்த காடுகளில் தங்கி மறைமுகமாக அரசாங்கத்தின் மீது தாக்குதல் நடத்தும்
துணிவு இவரது அடையாளம்! 

சி.ஆர்.பி.எப்பின் ஒரு பகுதியான கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசலியூட் ஆக்ஷன் (COBRA) பிரிவினர், ஆள் நடமாற்றம்மில்லாத அடர்ந்த காடுகளில் தங்கி மறைமுகமாக அரசாங்கத்தின் மீது தாக்குதல் நடத்தும் நக்சல்களை ஒடுக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு படையாகும். இதில் மிக குறைந்த வயதில் சி.ஆர்.பி.எப் கமாண்டோ பெண் அதிகாரியாக பணியாற்றும் உஷா கிரண் ( 29) தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள இலக்குத் தெரியாத காட்டில் நக்சல்களை ஒடுக்க பணிபுரிந்து வருகிறார்.
முன்னாள் தேசிய விளையாட்டு வீராங்கனையும், ரசாயன பட்டதாரியுமான உஷாகிரண், அவரது குடும்பத்தில் சி.ஆர்.பி. எப்பில் பணியாற்றும் மூன்றாவது தலைமுறையை சேர்ந்தவர் ஆவர். இவரது தாத்தா, அப்பா ஆகிய இருவருமே சி.ஆர்.பி.எப்பில் பணியாற்றியவர்கள் என்பதால் இவருக்கும் சி.ஆர்.பி.எப்பில் சேர ஆசை தோன்றியுள்ளது. சி.ஆர்.பி.எப்பில் உள்ள கோப்ராவில் சேருவதுதான் இவரது முக்கிய குறிக்கோளாக இருந்தது. கதார்புர் குருகிராமில் உள்ள சி.ஆர்.பி. எப் அகாதெமியில் உஷாகிரண் சேரும்போது, பெண்கள் யாருமே இல்லை. எல்லாருமே ஆண்கள், கோப்ராவில் சேர பெண்கள் யாரும் விரும்பவில்லையாம்.
அகாதெமியில் தேர்ச்சிப் பெற்றவுடன், சத்தீஸ்கரில் பாஸ்டர் பகுதியில்தான் பணியாற்ற வேண்டுமென்று தீர்மானித்தேன். நான் எதிர்பார்த்தபடி அந்த பகுதியிலேயே எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு தங்கியிருந்த ஓராண்டிலேயே சி.ஆர்.பி.எப் எடுக்கும் நடவடிக்கைகளை அறிந்து கொள்ளவும், கோப்ரா செயல்படும் விதத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. கமாண்டோ படையில் சேர நான் எடுத்த முடிவு சரியானது என்று தோன்றியது.
என்னுடைய சிறுவயதில் ஆண்டுதோறும் டெல்லியில் குடியரசு தினத்தன்று நடக்கும் ராணுவ வீரர்களின் அணிவகுப்புக்கு என்னை தவறாமல் என் தந்தை அழைத்துச் செல்வதுண்டு. ராணுவ வீரர்கள் சீருடை அணிந்து அணிவகுப்பு நடத்துவதை பார்த்து நான் வியப்படைவேன். 
விவரம் தெரிந்த பிறகுதான் ராணுவத்தினர் வெறும் அணிவகுப்பு மட்டும் செய்வதில்லை. இந்த நாட்டின் பாதுகாப்புக்காக எல்லையில் உயிரை பணயம் வைத்து போராடுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன் என்று கூறிய உஷா கிரண், கோப்ராவில் சேர்ந்த அனுபவத்தைப் பற்றி விவரிக்கிறார்:
"கோப்ராவில் பெண்கள் சேருவது அத்தனை சுலமல்ல, கோப்ராவில் 10 பட்டாலியன் கமாண்டோ பிரிவுகள் இருந்தாலும், ஒன்றில் கூட பெண்கள் கிடையாது. என்னுடைய விண்ணப்பத்தை பார்த்த மூத்த அதிகாரிகள் என் துணிச்சலுக்காக கோப்ராவில் சேர அனுமதித்தனர். கோப்ரா ஒரு சிறப்பு அமைப்பு என்பதால் இதற்கென்று பிரத்யேக பயிற்சிகள் உண்டு. உடல் ரீதியாகவும், மனோ ரீதியாகவும் அளிக்கப்படும் இந்த பயிற்சியின்போது பெண்கள், தங்கள் சக்தியை ஆண்களின் வலிமைக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். பயிற்சியின்போது ஆண்-பெண் வித்தியாசம் ஏதுமில்லை.
கோப்ரா ஒரு சிறப்பு படை என்பதால், மற்றொரு கோப்ரா கமாண்டோவுடன் போராடக் கூடிய வலிமை பெற்றிருக்க வேண்டும். அனைவரும் ஒன்றாக பயிற்சி பெறும்போது, பெண் என்பதற்காக கூடுதல் நிமிடங்களோ, விநாடிகளோ ஒதுக்க மாட்டார்கள் இதன் மூலம் எனக்கு கிடைப்பது வெற்றியோ, தோல்வியோ, அது எதிர்காலத்தில் என்னைப் போன்று கமாண்டோ படையில் சேரும் பெண்களுக்கு ஒரு அனுபவமாக இருக்கும் என்று நினைப்பேன்.
நக்சல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக பாஸ்டரில் நியமிக்கப்பட்ட எனக்கு ஒரு கம்பெனிக்கு சுதந்திரமாக செயல்பட அனுமதித்தனர். வெளி தொடர்பில்லாத காட்டில் எனக்கு கீழ்படிந்து நடக்கும் வீரர்களை ஒரு குடும்பத் தலைவிபோல் அவர்களை அரவணைத்து அவர்களின் தேவை அறிந்து செயல்பட வேண்டிய கட்டாயம் எனக்கிருந்தது. இருப்பினும் நக்சல்களின் சவால்களை சந்திப்பதற்காக பழங்குடியினர் வசிக்கும் காட்டில், மொபைல் தொடர்பற்ற சூழ்நிலையில் ஆண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள ஒரு குழுவுக்கு நான் ஒருத்தி கமாண்டராக தலைமை ஏற்று நடத்துவது முதலில் சங்கடமாக தெரிந்தது. அதேபோல் முதன்முறையாக தங்களை ஒரு பெண் தலைமை ஏற்று நடத்துவதை அவர்கள் எப்படி ஏற்பார்கள் என்பதை அறிந்து ஒரு பாதுகாப்பான கமாண்டரின் கீழ் பணியாற்றுகிறார்கள் என்று உணர்த்தும் முயற்சியில் ஈடுபட்டேன். நாளடைவில் ஏற்பட்ட மாறுதல்களால், என் தலைமை மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டதோடு, என்னுடைய நடவடிக்கைகள் சரியானதுதான் என்பதையும் ஏற்றுக் கொண்டனர். எதிரிகளை ஒடுக்க முன்னணியில் நின்று தலைமைதாங்கி போரிடுவது ஒரு சவாலான விஷயமாகும். என்னுடைய படை வீர்கள் தைரியத்துடனும் ஆர்வத்துடனும் என் கட்டளையை ஏற்று செயல்படும்போது எனக்கு வலி தெரிவதில்லை. என் மீது வைத்துள்ள நம்பிக்கை அவர்கள் கண்களில் தெரியும்போது என் மனச்சோர்வு நீங்கிவிடும்.

என்னுடைய பணி நேரம் முடிந்த பின்னரும் அந்த மலைப் பிரதேசத்தில் வசிக்கும் குடும்பங்களில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை முகாமுக்கு அழைத்து வந்து பாடம் சொல்லிக் கொடுப்பேன். தனிப்பட்ட வாழ்க்கையையும், தொழிலையும் சரிசமமாக கவனிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் நம்முடைய குடும்பத்தை நன்கு புரிந்து வைத்திருப்பதும், விவேகமுள்ள கணவரும் இருந்துவிட்டால் கவலையே இல்லை என்னுடைய கணவர் டாக்டர் கிரணும் சி.ஆர்.பி.எப்பில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றுவதால், பணி தொடர்பாக நான் எடுக்கும் முடிவுகளை புரிந்து கொண்டு எனக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். நான் சி.ஆர்.பி.எப்பில் சேர்ந்தது முதல் எனக்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்பட்டதில்லை முதன்முறையாக நான் கமாண்டோ அதிகாரியாக பொறுப்பேற்றதை என் குடும்பத்தினர் பெருமையாக கருதுகிறார்கள்'' என்றார் உஷாகிரண்.
- பூர்ணிமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com