குழந்தை இலக்கியத்தில் சிறப்பான படைப்புகளைத் தரும் எழுத்தாளர்களை கௌரவிக்கும் வகையில், சாகித்ய அகாதெமி அமைப்பு 2010- ஆம் ஆண்டு முதல் "பால சாகித்ய புரஸ்கார்' என்ற விருதினை வழங்கி வருகிறது. அந்த வகையில் எழுத்தாளர் தேவி நாச்சியப்பன் குழந்தை இலக்கியத்திற்கு ஆற்றிய ஒட்டு மொத்த பங்களிப்பிற்காக 2019 -ஆம் ஆண்டிற்கான "பால சாகித்ய புரஸ்கார்' விருதுக்கு தமிழ் நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவ்விருதினைப் பெறும் முதல் பெண் எழுத்தாளர் இவர். குழந்தை இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் மகள்.
தேவி நாச்சியப்பனின் இயற்பெயர் தெய்வானை. தமிழ்மொழி முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய முதல் மொழிபெயர்ப்புக் கதை 1983-ஆம் ஆண்டில் கோகுலம் சிறுவர் மாத இதழில் வெளியானது.
இவருடைய முதல் சிறார்களுக்கான மொழி பெயர்ப்பு நூல்கள் "பல தேசத்துக் குட்டிக் கதைகள் - பகுதி 1' மற்றும் "பல தேசத்துக் குட்டி கதைகள் - பகுதி -2' என இரண்டு தொகுப்புகளாக 1984-ஆம் ஆண்டில் வெளியானது. இதைத் தொடர்ந்து 1997-இல் "பந்தும் பாப்பாவும்', 2002 -இல் "பசுமைப்படை' மற்றும் "நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர்' போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார். 2013- இல் "பேசியது கைபேசி' மற்றும் 2005-இல் "புத்தகத் திருவிழா' என இரண்டு சிறுகதைத் தொகுப்பு வெளியானது.
2016-இல் குழந்தைக் கவிஞர் "செல்லகணபதி' , "பட்டிமன்றம்' என்கிற நூலினையும், 2018 -இல் குழந்தை எழுத்தாளர் சங்கம் வரலாறு போன்ற நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
இவர், பல்வேறு விருதுகளைப் பெற்றவர். குறிப்பாக தமிழக அரசு, "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' மற்றும் "தமிழ்ச் செம்மல்' விருதினை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
- ஆர்.வி.பதி