பெப்பர் ரைஸ்
தேவையானவை
பாசுமதி அரிசி - கால் கிலோ
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - அரை டம்ளர்
இஞ்சி விழுது - சிறிது, பூண்டு விழுது - சிறிது
முந்திரி பருப்பு - 6, நெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: அரிசியுடன் போதுமான அளவு நீர் சேர்த்து குக்கரில் உதிரியாக வடித்து கொள்ளவும். முந்திரி பருப்பை துண்டுகளாக ஒடித்து சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும். அடிகனமுள்ள பாத்திரத்தில் கொஞ்சம் நெய்விட்டு தேங்காய்த் துருவலைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இத்துடன் உதிரியான சாதம், முந்திரி பருப்பு, மிளகுத்தூள், இஞ்சிப்பூண்டு விழுது, உப்பு, மீதமுள்ள நெய் இவைகளைச் சேர்த்து நன்கு கிளறி கொடுத்து மூன்று நிமிடங்களில் இறக்கவும். பெப்பர் ரைஸ் ரெடி. இத்துடன் வெங்காய தயிர் பச்சடி வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
சப்பாத்தி டிலைட்
தேவையானவை:
கோதுமை மாவு - 200 கிராம்
சர்க்கரை - 150 கிராம்
பால் - 2 டம்ளர்
நறுக்கிய முந்திரி,
பாதாம் - தலா 2 தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - சிறிது
செய்முறை: கோதுமை மாவுடன் நீர் தெளித்து நன்கு பிசைந்து, அடித்து இரண்டு மணிநேரம் வைக்கவும். பின்னர் மாவை சப்பாத்திகளாக நெய் தடவிய தோசைக்கல்லில் இருபக்கமும் நன்கு சுட்டு எடுக்கவும். ஆறினதும், கத்தியால் சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர், பாலுடன் கொஞ்சமாக நீர் சேர்த்து கொதிக்கவிடவும். பால் நன்கு காய்ந்ததும், அத்துடன் சர்க்கரை, முந்திரி, பாதாம், ஏலக்காய்த் தூள் இட்டு நன்கு கலந்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும், நறுக்கி வைத்துள்ள சப்பாத்தி துண்டுகளை இட்டு, இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான சப்பாத்தி டிலைட் ரெடி.
- உத்ரா ஆனந்த், சென்னை.
மின்ட் ஆலு ஃப்ரை
தேவையானவை:
பெரிய அளவு உருளைக் கிழங்கு - 2
புதினா - 1 கட்டு
வெங்காயம் - 1
தயிர் - கால் கிண்ணம்
பட்டை - 1 துண்டு
தனியாத் தூள் - 1 தேக்கரண்டி
கிராம்பு, ஏலக்காய் - தலா 2
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
பச்சைமிளகாய் - 4
சோம்பு - அரை தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
எலுமிச்சைச்சாறு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
கொத்துமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து துண்டுகளாக நறுக்கி வைக்கவும். புதினா இலையை சுத்தம் செய்து, அத்துடன் இஞ்சி, பூண்டு சோம்பு, தனியாத்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு எலுமிச்சைச் சாறு, சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி, உப்பு சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் அரைத்து வைத்துள்ள புதினா விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கி கிளறி முடிவிடவும். நன்றாக வெந்ததும் இறக்கவும். கொத்துமல்லித் தழைத் தூவி பரிமாறவும், மிகவும் ருசியாக இருக்கும்.
பிரெட் வித் கார்ன் கிரேவி
தேவையானவை:
பிரெட் துண்டுகள் - 10
ஸ்வீட் கார்ன் - 2
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - அரை கிண்ணம்
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
ஃப்ரெஷ் கிரீம் - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை - சிறிது
உப்பு - சிறிது
செய்முறை: ஸ்வீட் கார்னை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து முத்துக்களாக உதிர்த்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது வெண்ணெய் விட்டு உருகியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், உப்பு, சர்க்கரை, உதிர்த்த சோளம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு இறக்கி, ஃப்ரெஷ் கிரீம் சேர்க்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடாக்கி, வெண்ணெய் தடவிய ப்ரெட் துண்டுகளை டோஸ்ட் செய்யவும். அதன்மேல் கார்ன் கிரேவியைச் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.
- சு.இலக்குமணசுவாமி, மதுரை.