அப்பா படுகோனைப் பின்தொடர்ந்து, இறகுப் பந்தாட்டத்தில் பயிற்சி பெற்று தேசிய அளவில் வீராங்கனை ஆன போதிலும் பேஸ்பால் விளையாட்டில் மாநில அளவில் ஆடினார். "ஜுஜுட்ஸு' எனப்படும் தற்காப்புக் கலையையும் தீபிகா விடவில்லை. "ஜுஜுட்ஸு' பயின்ற அனுபவம் தீபிகாவை "சாந்தினி சவுக் டு சைனா' திரைப்படத்தில் எல்லாவிதமான சண்டைக் காட்சிகளில் நடிக்க உதவியது.
மாடலாக வேண்டும் என்ற குறிக்கோளில் மும்பைக்குத் தனியாகச் சென்று வசித்து, மாடலாகி பின் ஹிந்தி பட உலகில் முன்னணி நடிகையாக தீபிகா மாறினார். நடுவில் ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்திருக்கும் தீபிகா தன்னைப் போல் மன அழுத்தத்தில் சிக்கி தவிப்பவர்கள் தன்னைப் போல மீண்டு வந்து மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற முடிவில் "லிவ் லாஃப் லவ் ஃபவுண்டேஷன்' அமைப்பை தொடங்கினார்.
தந்தை ப்ரகாஷ் படுகோன் நடத்தி வரும் "ஒலிம்பிக் கோல்ட் க்வெஸ்ட்' பொதுநல நிறுவனத்திலும் தீபிகாவின் பங்களிப்பு உண்டு. மாடலாக, நடிகையாக, தொழில் முனைவராக, சமூக ஆர்வலராக மாறி இருக்கும் தீபிகா சமீபத்தில் நடிகர் ரன்வீர்சிங்கை திருமணம் செய்து கொண்டார்.
"ஒவ்வொருவரின் விருப்பங்கள் அவர்களது கைரேகையைப் போன்றது. தனித்துவமானது. வித்தியாசமானது. அதனை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் சொந்த முயற்சியால் கிடைக்கும் பலன் அதிக மகிழ்ச்சியை, மன நிறைவைத் தரும். என்னை பெரிய நட்சத்திரமாக நான் நினைத்துக் கொள்வதில்லை. கர்வப்பட்டுக் கொள்வதில்லை. என்னை சக வயதுடைய ஒரு பெண்ணாகவே பார்க்கிறேன்.
சினிமா, மாடலிங் தொழிலில் ஈடுபட்டிருப்பதால் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டியது ஒரு கட்டாயமாக மாறிவிட்டது. அதற்காக உடலை கட்டு கோப்பாக வைத்துக் கொள்வது அவசியமாகிறது. அதற்காக மெலிந்த உடல் அமைப்புடன் இருப்பதுதான் பெண்களுக்கு "அழகு' என்று சொல்ல மாட்டேன்.
வாழ்க்கை என்பது மேடு பள்ளங்கள் நிரம்பியது. உங்களை புரட்டிப் போடும் நம்பிக்கையை தவிடு பொடியாக்கும் பலவித நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் நிகழலாம். சிலர் உங்களை வீழ்த்துவதில் மும்முரமாக இருப்பார்கள். அதில் சில சமயம் வெற்றியும் பெறுவார்கள். அதனால் நீங்கள் . "என்ன வாழ்க்கை இது' என்று நொந்து போய் மனமுடைந்து போகலாம். விரக்தி அடையலாம். நம்பிக்கை இழந்து சோர்ந்து நிற்கலாம். உணர்ச்சி வசப்படலாம். கோபத்தில் கொந்தளிக்கலாம். ஆனால் அந்த சமயங்களில் மனதை சாந்தப்படுத்தி சிந்தனைகளை கட்டுப்படுத்தி சோதனைகளைக் கடக்க வேண்டும். அந்த சூழ்நிலையில் உங்களை இழக்காமல் "அடுத்தது என்ன' என்று . உங்கள் வழியிலேயே பயணத்தைத் தொடருங்கள். அந்த நகர்வில் "எங்கே தவறு இழைத்து விடுவோமோ' என்கிற பயத்தை தவிர்த்துவிடுங்கள்.
எனது பெற்றோர் நான் செய்த தவறுகளைக் கண்டு என்னை ஒரு போதும் அடித்ததில்லை. "எது சரி.. எது தவறு' என்பதை எனக்கு புரிய வைத்து நேர்வழியைப் பரிச்சயப்படுத்தினார்கள். நல்வழிப்படுத்தினார்கள். வாழ்க்கையில் இலக்கு நிர்ணயிப்பது நல்லது. அந்த இலக்கினை அடைய லட்சியத்துடன் உழைப்பது அவசியம். அதற்காக ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கட்டத்திலும் அளவிடுவது, கணக்கிட்டுப் பார்ப்பது அழகல்ல. நடைமுறைக்குச் சரிப்பட்டு வராது. அசாதாரணமாக இருப்பது தவறில்லை. ஆனால் அனிச்சையாக அலட்சியமாக நடந்து கொள்வது கூடாது. அதனால் நான் எப்போதும் என் மனம் சொல்வதை கேட்பதில்லை. மனம் சொல்கிற மாதிரி நடந்து கொள்வதில்லை. அதே சமயம் இதயம் சொல்வதை காது கொடுத்துக் கேட்பேன். அப்படி நடந்து கொண்டதுதான் எனக்கு சரியான தீர்வை வழங்கியுள்ளது. மனதில் பட்டதை, தோன்றுவதை அப்படியே பேசிவிட மாட்டேன். நன்கு யோசித்த பிறகே பேசுவேன். நான் சீக்கிரம் உணர்ச்சிவசப்படுபவள். அதனால் எச்சரிக்கையாக இருக்கிறேன். மனதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறேன்'' என்கிறார் தீபிகா படுகோன்.
- கண்ணம்மா பாரதி