தகவலை இணையத்தில் பிரபலமாக்கி (டிரண்டிங்) பரவ உதவும் டுவிட்டர் சமூக ஊடகம், ஃபேஸ் புக்குக்கு போட்டியாக 2006-இல் தொடங்கப்பட்டது. சுமார் 30 கோடி பயனாளர்களைக் கொண்ட டுவிட்டரை அமெரிக்கா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக அதிகமானோர் இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர்.
குரல் பதிவுக்காக பயன்படும் "கிளப் ஹவுஸ்' செயலி, உலக அளவில் வரவேற்பைப் பெற்றதால், 2020 நவம்பரில் பயன்பாட்டாளர்களின் நேரலை குரல் பதிவு நிகழ்ச்சியை நடத்த உதவும் "ஸ்பேஸஸ்' சேவையை டுவிட்டர் தொடங்கியது.
பயன்பாட்டாளர்கள் தங்களைப் பின்தொடர்பவர்களை இணைத்து ஒலி வடிவில் உரையை நேரலையில் நிகழ்த்த இந்த சேவை உதவியது. ஆனால், 600 பின்தொடர்வோர் இருப்பவர்களுக்கு மட்டும் "ஸ்பேஸஸ்' சேவையைப் பயன்படுத்த டுவிட்டர் கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டு தற்போது பயன்பாட்டாளர்கள் யார் வேண்டுமானாலும் தங்களின் குரல் பதிவை ஸ்பேஸஸில் நேரலை செய்ய டுவிட்டர் அனுமதி அளித்துள்ளது.
நேரலை செய்யப்பட்ட பிறகு இந்த குரல் பதிவை அதிகபட்சமாக 30 நாள்களுக்கு சேமித்து வைத்து கொள்ளலாம். இதை அனைத்து டுவிட்டர் பயன்பாட்டாளர்களுக்கும் சேமித்து வைத்து பகிரலாம்.
இந்த சேவையைப் பயன்படுத்த டுவிட்டர் வலைதளத்துக்குள் சென்று நான்கு புள்ளிகளைக் கொண்ட "ஸ்பேஸஸ்' சேவை பொத்தானை கிளிக் செய்து உரையாற்ற விரும்பும் துறையைத் தேர்வு செய்து குரல் பதிவை செய்து கொள்ளலாம். பிறர் பகிர்ந்த குரல் பதிவுகளையும் கேட்கலாம்.
தேவைப்பட்டால் இந்தப் பதிவுகளை பதிவிறக்கம் செய்து சேமித்தும் வைத்துக் கொள்ளலாம்.
நேரலை குரல் பதிவு சேவையை அனைவருக்கும் டுவிட்டர் வழங்கியுள்ளதால் இது பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.