ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மன்னரைப் பார்க்க, அந்தரப்புரத்தில் இருந்து லலிதாங்கி கோபமாக வருகிறாள். லலிதாங்கியைச் சமாதானப்படுத்தும் நோக்கில் மன்னர் அவளிடம் அளவளாவிக் கொண்டிருக்கையில் சட்ட அமைச்சர் அங்கு அழுதபடி வருகிறார். அவர் தன்னை சில அமைச்சர்கள் ஒரு சைபர் கிரைமில் மாட்ட வைத்து அவதூறு செய்வதாகப் புலம்புகிறார். அதை ஒட்டி கணேஷும் ஜூலியும் பேசிக் கொண்டிருக்கையில் crying shame எனும் சொல்லாடலின் பொருள் என்ன எனக் கேட்கிறான் கணேஷ். Shame என்றால் கூச்சம், அவமானம், அசிங்கம், ஆனால் அதெப்படி Shame அழும்? நியாயமான கேள்வி தானே? இதற்கு ஜூலி என்ன பதில் சொல்லப் போகிறது எனப் பார்ப்போமா?
ஜூலி: Crying shame என்றால் அசிங்கம், கூச்சம், வெட்கம் போன்ற உணர்ச்சிகளை நாம் நினைத்துக் கொள்ளக் கூடாது. இதன் பொருள் நேர்மாறானது. It means a situation that makes one feel sad or disappointed. அதாவது ஒரு சந்தர்ப்பம் அல்லது சம்பவத்தைக் கண்டு நீங்கள் மோசமாக உணர்வது, ஏமாற்றம் அடைவது. பெரிய நம்பிக்கை, எதிர்பார்ப்பை ஒருவர் மீது வைத்து அவர் உங்களை ஏமாற்றும் போது வேதனையடைவது.
கணேஷ்: உதாரணமா, சட்டமன்றத்தில் ஒரு எம்.எல்.ஏ போனில் தப்பான வீடியோ பார்த்து மாட்டிக் கொள்ளும்போது ஒவ்வொரு சராசரி குடிமகனும் உணர்வது.
ஜூலி: ம்...ம்...ம்... அப்படியும் சொல்ல முடியும், ஆனால் நிறைய நேரங்களில் மக்கள் அதை பாஸிட்டிவ்வா எடுத்துக்கிறாங்க.
கணேஷ்: புரியல.
ஜூலி: ஒரு பெரிய அசிங்கம் வருது. அது ஒரு குழந்தைத்தனமான தவறாகவும் இருக்குது.
அப்படி ஓர் இழுக்கு மிகுந்த மரியாதையும் அதிகாரமும் கொண்ட பதவியில் உள்ளவருக்கு வரும் போது ஒருபக்கம் மக்கள் அந்த வீழ்ச்சியைக் கொண்டாடினாலும் நிறையப் பேர் அதை நினைத்து இரக்கப்படுவதும் உண்டு.
கணேஷ்: ஏன்?
ஜூலி: ஏன்னா it humanises the celebrities and powerful people. When the mighty people are knocked off their pedestal in the eyes of common people, it humanises them as well.
கணேஷ்: ஹ்யூமனைஸ் என்றால் ஒருவரை மனிதனாக்குவதா?
ஜூலி: அல்ல, இந்த சொல்லையும் நாம் நேரடியான பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது. To humanise someone is to make (someone or something) seem gentler, kinder, or more appealing to people.
கணேஷ்: ஓ... அப்படியெல்லாம் நடக்குமா?
ஜூலி: சில தலைவர்களை சிறையில் தள்ளியதும் மக்களுக்கு அவர்கள் மீது பாசம் அதிகமாகி அடுத்த தேர்தலில் அவர்களை வெற்றி பெற வைப்பதைக் கண்டதில்லையா நீ? இதுவே ஒரு சாதாரண
மனிதன் சிறைக்குப் போனால் அவனைக் கேவலமாகப் பார்ப்பார்கள். பெரும் பிம்பமாக இருந்த ஒருவருக்கு அது நேரும் போது நம் மக்களிடம் இரக்கமே அவர்களின் பால் தோன்றுகிறது. The frailties of the electorate.
கணேஷ்: Fraility என்றால்?
ஜூலி: பலவீனம்.
கணேஷ்: Electorate என்றால் தேர்தலில் பங்குபெறுகிறவர்களா?
ஜுலி: பக்கத்தில் வந்து விட்டாய். electorate என்றால் வாக்காளர்கள்.
கணேஷ்: சரி புரியுது. இன்னொரு சந்தேகம் - அதென்ன pedestal?
ஜூலி: உச்சாணிக்கொம்பு. ஒருவரை உச்சாணிக்கொம்பில் வைப்பதென்றால் என்ன? அவருக்கு தேவைக்கு அதிகமான மரியாதையை அளிப்பது. அங்கிருந்து கீழே விழுந்தால் எலும்பு நொறுங்கி விடும். அது தான் knocking someone off the pedestal. மேலிடத்தில் உள்ள ஒருவரை அசிங்கப்படுத்தி கீழிறக்குவது அல்லது அவர்களே தம் செயல்களால் அப்படி தம் மரியாதையை இழந்து எல்லாராலும்
இகழும் நிலையை எட்டுவது.
கணேஷ்: யார் அவர்களை அங்கே உச்சாணிக்கொம்பில் வைப்பது?
ஜுலி: நாம் தான், வேறு யார். நமக்கு எப்போதும் நாயகர்கள், கடவுளர்கள் தேவைப்படுகிறார்கள். இதைச் சொல்வதற்கு ஒரு மரபுத்தொடர் உள்ளது. நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?
(இனியும் பேசுவோம்)