உலகின் மூலைமுடுக்கெல்லாம் சுற்றிப் பார்த்திருந்தாலும், விமானப் பயணத்தில் வானில் பறந்தபடி வான்வெளியைக் கண்டு களிக்கும் அழகே தனி. ஒரு முறை கண்ட வான் காட்சியை அடுத்த முறை காண முடியாதபடி மேகங்கள் மாற்றி அமைத்துக் கொள்வதே அதன் சிறப்பு.
அப்படி விண்வெளி ஆராய்ச்சிக்காக மனிதர்களை அனுப்பி வைக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், அண்மையில் வான்வெளிக்கு சுற்றுலாப் பயணத்தை முதல்முறையாகத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் விண்வெளி சுற்றுலாப் பயணப் போட்டியும் தொடங்கியுள்ளது.
உலகின் பெரும் செல்வந்தர்கள் மட்டும் இந்தப் பயணங்களை மேற்கொள்ளும் வகையில் பல கோடி ரூபாயில் பயணச் செலவு அமைந்துள்ளது.
இந்தப் பயணச் செலவைக் குறைத்து, பலூன் மூலம் நிலத்தடியில் இருந்து 1 லட்சம் அடிகளுக்கும் அதிகமான உயரத்துக்குக் கொண்டு சென்று பூமிப் பந்தின் அழகைக் கண்டுகளிக்கும் சுற்றுலாவை வெறும் 50 ஆயிரம் அமெரிக்க டாலர் செலவில் மேற்கொள்ள புதிய முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சாதாரண விமானத்தில் செல்லக் கூடிய உயரத்தில் இருந்து நான்கு மடங்கு அதிக உயரத்திற்குச் செல்வதாக இந்த பலூன் பயணம் அமையும் என்றும் அங்கிருந்தவாறு வான்வெளியின் பகல், இரவு அழகை ரசிக்கவும், அங்கிருந்து தொலைநோக்கியில் பூமியில் உள்ள முக்கிய இடங்களைக் காணவும் செய்யலாம் என்றும் "வெர்ல்டு வீவ்' நிறுவனம் அறிவித்துள்ளது.
பலூனில் எட்டுப் பேர் அமர்ந்து புறப்பட்டு 12 மணி நேரத்துக்கு வான்வெளியில் தொடர்ந்து பயணம் செய்யும் வகையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-இல் திட்டமிடப்பட்டுள்ள இந்த பலூன் பயணத்துக்கு 500 டாலர் முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பலூனில் இரண்டு பயிற்சி பெற்ற விண்வெளி பயண பயிற்சியாளர்கள் பயணம் செய்து பலூனைப் பத்திரமாக தரையிறக்கம் செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.