முக நூலிலிருந்து....
வெளிச்சம் அருவியாகக் கொட்டும் கணத்தில்...
பூமியில் சூர்ய நதி.
சுந்தரபுத்தன்
சலனமற்று "இருத்தல்'
சாத்தியமா எனில்...
நிச்சயமாக இல்லை.
அங்ஙனம் இருப்பினும்
அது "நிரந்தரமும்' இல்லை.
நிரந்தரம் என்ற ஒன்று
இங்கு இல்லவே இல்லை.
நிறைமதி
குறைகளுடனே ஏற்கிறோம் நிலவை.
பழுது நீக்கியே பருகுகிறோம் நீரை.
வாழ்வதற்கான வழிமுறையில் தள்ளாடுவதே யுக்தி.
பிடித்த யுக்தியின் பயணத்தில் நசுங்குகிறது அன்பு.
நம் அன்பு மாறுபடும் மற்ற அன்பு அறியாமல்.
யோசித்தால்...
புகழ் வேட்டை யுத்தத்தில் யோசனைக்கு இடமேது?
தன்னிழலை மிதிக்காத தயவிருந்தால் பெருமகிழ்வு.
ராசி அழகப்பன்
உதிர்ந்து கிடக்கும் பறவையின் இறகை மிதித்துவிடாதீர்.
ஒரு காலத்தில் அது உயரத்தில் இருந்தது!
கோ.வசந்தகுமாரன்
பூமியைச் சூடாக்க 30,000 ரூபாய்க்கு ஏசி வாங்கும் நாம்...
பூமியைக் குளிர்விக்க 30 ரூபாய்க்கு மரக்கன்று வாங்கி நடுவதில்லை.
வினோதினி
எல்லா உறவுகளும் கண்ணாடி போலத் தான்..
உடையாத வரை ஒரு முகம்...
உடைந்துவிட்டால் பல முகம்.
ஜெகநாதன்
கிராமம் சார்ந்த வாழ்க்கை என்பது குலத்தொழில் சார்ந்த வாழ்க்கையாகவே ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்து வந்தது. குலத்தொழில் சார்ந்த வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைமை உண்டான போது மனிதர்கள் இன்னொரு கிராமத்திற்குச் சென்று வாழ முயன்றிருக்கக் கூடும். ஆனால் அதை விடவும் நல்லபடியான வாழ்க்கை நகரத்தில் இருக்கிறது என நம்பும் போது பூர்வீகக் கிராமங்களை விட்டுவிட்டு நகரங்களில் வந்து ஏதாவது வேலை செய்து பிழைக்கத் தொடங்கியவர்கள் உண்டாக்கிய பழமொழியே... "கெட்டும் பட்டணம் சேர்' என்பதாக இருக்கக் கூடும். அந்த வகையில் இந்தப் பழமொழியின் அதிக பட்ச வயது, நூறைத் தாண்டாது என்பது என் கணக்கு.
1950 - களில் ஏற்பட்ட தொழிற்சாலைப் பெருக்கத்தின் காரணமாக உண்டான நகர்மயம், பெருமளவு வேளாண்மைத் தொழிலாளிகளை நகரங்களை நோக்கி நகர வைத்தது. தொழிற்சாலைகளின் பணியாளர்களாகவும், பெருந்தொழில்களின் துணைத் தொழில்களில் ஈடுபடுபவர்களாகவும் நகரத்தை நோக்கி நகர்ந்தவர்கள் கூட்டம் என்றால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வேலைகளைச் செய்வதற்கும், சேவைப் பணிகளைச் செய்வதற்குமான உதிரித் தொழிலாளர்களாகவும் நகரங்கள் வீங்கிப் பெருத்துள்ளன.
நகரங்களின் மக்கள் பெருக்கத்தை வீங்கிப் பெருத்தது என்று தான் சொல்ல வேண்டும். அப்பெருக்கம் இயல்பான வளர்ச்சி அல்ல. இயல்பான வளர்ச்சி ஆபத்தில்லாதது. வீங்கிப் பெருப்பது ஒருவிதத்தில் நோய். அந்த நோயின் அளவு ஒவ்வொரு நகரத்துக்கும் வேறு வேறு விதமாக இருக்கின்றன. திருநெல்வேலி, மதுரை, தஞ்சை போன்ற பாரம்பரியமான நகரங்கள் அவ்வளவு வேகமாக வளர்ந்தன எனச் சொல்ல முடியாது. ஆனால் தொழில் நகரங்கள் என அறியப்படும் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, தூத்துக்குடி போன்றவற்றின் வளர்ச்சி ஆபத்தான வளர்ச்சி. இவை எல்லாவற்றையும் விட பெரும் ஆபத்தோடு தமிழகத்தின் தலைநகர் சென்னை வளர்ந்து கொண்டிருக்கிறது.
https://ramasamywritings.blogspot.com/