கரோனா நோய் தொற்றுக்குக் காரணமான தீ நுண்மி மனித தோல் மேற்பரப்பின் மீது சுமார் 9 மணி மணி நேரம் வரை தங்கியிருக்கலாம் என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிக நேரம் தோல் மேற்பரப்பில் தீ நுண்மி தங்கியிருப்பதால் நோய் தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இன்ப்ளூயன்சா ஏ வைரஸ் (ஐஏவி) மனித உடல் தோலில் சுமார் 1.82 மணி நேரம் வரை தங்கியிருக்கும் என்பதை ஜப்பானில் உள்ள கியோட்டோ ப்ரிபெக்சுரல் மருத்துவ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சானிடைசரைப் பயன்படுத்துவதன் மூலம் மனித உடல் தோல் மேற்பரப்பின் மீது தங்கியுள்ள தீநுண்மிகள் செயலிழக்கின்றன என்ற ஆய்வுத் தகவல் "கிளினிகல் இன்பெக்டியஸ் டிஸ்சீஸ்' என்ற இதழில் வெளியாகியுள்ளது. அதனால் சானிடைசரைப் பயன்படுத்துவதன் மூலம் கரோனா நோய்த் தொற்று தீ நுண்மி பரவுவதைத் தடுக்கலாம் என்று அந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் தீ நுண்மிகளுக்கு எதிராக 80 சதவீத எத்தனால் கிருமி நாசினியாக செயல்படுவது குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா தீ நுண்மி மற்றும் இன்ப்ளூயன்சா ஏ தீநுண்மிகள் மனித தோலில் படிந்து உயிர்த்திருக்கும் நேரத்தை விடஇரும்பு, கண்ணாடி, பிளாஸ்டிக் போன்ற மேற்பரப்புகளில் படிந்திருக்கும்போது, அதிக நேரம் உயிர்த்திருக்கின்றன.
மனித தோலின் மேற்பரப்பில் படிந்துள்ள இன்ப்ளூயன்சா ஏ தீநுண்மியைக் காட்டிலும் கரோனா தீ நுண்மி அதிக நேரம் உயிர்ப்புடன் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சானிடைசர்களைப் பயன்படுத்துவதால் அவை அழிந்துவிடும் என்பதை அந்த ஆய்வு உறுதிப்படுத்திஉள்ளது.
- அருண்குமார்