தினமணி கொண்டாட்டம்

அன்புக்கு மட்டுமே நிஜமாக இருப்போம்!

24th Sep 2023 06:38 PM | ஜி.அசோக்

ADVERTISEMENT

 

மலையாள சினிமாவில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் முதன்மையானவர் அனில். மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் தொடங்கி இன்றும் இயங்கி வருபவர். அனில் இயக்கிய "பகல்பூரம்' இன்றும் கொண்டாடப்படும் சினிமாவாக இருந்து வருகிறது. அனிலின் அடுத்த பாய்ச்சல் தமிழ் சினிமா. "சாயாவனம்' படத்தின் மூலம் கோடம்பாக்கம் வருகிறார். ""வரம்பு மீறிய காதல், காமம், பெற்றோர்களை ஏமாற்றுவது, பொய் சொல்லுவது.. இன்னும் இன்னப் பிற மீறல்களைத்தான் பல சினிமாக்கள் அர்த்தப்படுத்தி வந்திருக்கின்றன. இது அது மாதிரி இல்லாமல், வேறொரு மீட்டொருவக்கத்தில் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. பெரு நகர வாழ்க்கை, தேடல்கள் ஆனாலும், எப்போதைக்குமான மனசு அந்தப் பள்ளி, கல்லூரி என காதல் வாழ்க்கையிலேயே சிலாகிக்க விரும்புகிறது. சக தோழர்கள், ஆசிரியர்கள், அந்த மர நிழல், குளம், ஆறு என எதையும் மறக்க மறுக்கிறது மனசு. ஆயிரங்களில் இருந்து லட்சங்களுக்கு மாறின வாழ்க்கை கிடைத்தாலும், இன்னொரு முறை அந்த வாழ்க்கையை வாழவே முடியாது.  வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது மாதிரி,  முகத்தால்... குரல்களால்... செயல்களால்... சாயல்களால்தான் நம் பிரிவுகளையும் பிரியங்களையும் நிரப்பிக் கொண்டே இருக்கிறோம்.'' உள் வாழ்க்கை உணர்ந்து பேசுகிறார் இயக்குநர் அனில்.

"சாயாவனம்'... தலைப்புக்கு பொருந்தி வருகிற அர்த்தம் என்ன....

அடர்ந்த காடு என்று பொருள்படும், படத்தில் வரும் கதாபாத்திரங்களின் குணத்தை இது குறிக்கும். கதையின் பெரும்பகுதி சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டது. கதாபாத்திரங்கள் காடுகளைப் போல அடர்த்தி மிக்கவை, அவர்களிடம் பல ரகசியங்கள் உள்ளன. முழுக்க முழுக்க மூடுபனி, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது என நினைக்கிறேன். கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக இயற்கை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வருடத்தின் பெரும்பாலான நாள்களில் மழை பெய்து கொண்டிருக்கும் அடர்ந்த வனம் சூழ்ந்த கிராமம் ஒன்றில் ஒரு புது மணப்பெண் எதிர்கொள்ளும் போராட்டத்தை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இப்படம் விவரிக்கிறது. பல சம்பவங்கள் அடங்கிய ஒரு காதல் வாழ்க்கை தரிசனம் இது.  காதல் அதி முக்கியமானது. ஒரு காதல். ஆனால், சந்தர்ப்பமும் சூழலும் இவர்களை இடம் மாற்றி வைக்கிறது.  எல்லோருக்கும் வாழ்க்கையில் இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் வரும். ஆனால், காதலில் எப்படியும் ஜெயித்தே ஆக வேண்டும் என்கிற வழிதான்.  இப்படியும் போகலாம், அப்படியும் போகலாம் என்பது இதில் இல்லை.  இதில் வருகிற கதை நாயகன் தேர்ந்தெடுக்கிற வழிதான் முக்கியமானது.  வாழ்வில் எல்லாமும் போன பின்பு, அன்புக்கு மட்டுமே நிஜமாக இருப்போம் என்று போகிற இடங்களும் வருகிறது. இன்னமும் இங்கே மென்மையும், பிற மனிதர் சார்ந்த  அக்கறையும் அருகிப் போய்விடவில்லை என்பதும் புரியும். 

ADVERTISEMENT

காதலை அர்த்தப்படுத்துகிற தலைமுறை பிள்ளைகள் மாறியிருக்கிற காலம் இது....

எல்லாவற்றுக்கும் இங்கே முன் மாதிரிகள் இருப்பதால், உங்களுக்கு அப்படித் தோன்றும். ஆனாலும், இன்னும் உண்மையான அன்புக்கு கிடையாய் கிடப்பவர்கள் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். காதல் என்கிற அற்பமான, அற்புதமான சந்தோஷம் இருப்பதால்தான் சமூகம் வாழ்கிறது. படித்தது, பார்த்தது, கேட்டது, உணர்ந்ததுதான் படைப்பாக வருகிறது. இது கூட சென்டிமென்ட் சினிமாவிற்கான வார்த்தையாக  இருக்கலாம். அப்படிப் பார்த்தால் இது கூட சென்டிமென்ட்தான். இந்த கதை, உறவுகள் கூட பழையதுதான்.ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாக காட்சிப்படுத்தியதுதான் புதிது.   என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்... இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடைய துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களை தவிர வேறு எதையும் விட்டு போக கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். மனித உறவுகளின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. காதலை சொல்லலாம். சொல்லாமல் கூட இருக்கலாம். காதல், பேசுகிற விஷயமில்லை. தயவு செய்து அதை உணருங்கள் தோழர்களே...

மொழி மாறி இயங்குகிற போது, நடிகர்களின் தேர்வு அவ்வளவு எளிதாக நடந்து விடாது....

இதுதான் கதை என்று முடிவான வேகத்தில் எல்லா நடிகர்களையும் முடிவு செய்து விட்டேன். கதையின் உண்மைத்தன்மைக்கு பக்கத்தில் இருப்பவர்களை மட்டும்தான் இந்தப் படத்திற்காக விரும்பினேன். அப்படி வந்தவர்தான் சௌந்தரராஜா. அதே போல் தேவானந்தா மற்றும் அப்புக்குட்டி இருவரும் முதன்மையான இடங்களில் நடிக்கிறார்கள். சந்தோஷ் தாமோதரன், "கர்ணன்' புகழ் ஜானகி, வெற்றிவேல் ராஜா மற்றும் மேத்யூ மம்ப்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் இருக்கிறார்கள்.  இவர்கள் இணைந்து நிற்கிற புள்ளிதான் கதையும் கூட. இன்னும் அவ்வளவு விஷயங்கள் இதில் உண்டு. இப்போது இருக்கிற ரசிகர்கள் மிகவும் சினிமா தெரிந்தவர்கள். அவர்களை தியேட்டரில் உட்கார வைக்க நிறைய திறமை தேவைப்படுகிறது. அழகான கதை. அவ்வளவுதான்.

பாடல், இசைக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பீங்க...

மோகன வீணை நிபுணரான போலி வர்கீஸ் மியூசிக். ஒரு நாளும் இவர் இசையை ரொம்ப லேசாக எடுத்துக் கொண்டது  கிடையாது. தெலுங்கு, மலையாளம் என இவருக்கு தனி வட்டம்  உண்டு. தமிழிலும் தனித்துவம் இருக்கிறது. அவசரப்படாமல் கதை கேட்டுப் பார்த்து, அதில் இசைக்கு என்ன வழி உண்டு என பார்த்து விட்டு "சரி'ன்னு சொல்கிற ஆளு. இசைக்கு வலிமையான இடங்கள் இருப்பதை தெரிந்து கொண்டு, உடனே அவரது பெஸ்ட்டைக் கொடுத்து இருக்கிறார். ரசித்து கேட்கும் ட்யூன். பாடல்கள் எல்லாமே அருமையாக வந்திருக்கிறது.  தனித்துவத்தை நீங்களே உணர்கிற இடங்கள் வருவது  ஆச்சர்யம்.

நல்லிசையும், மெல்லிசையும் இணைகிற ஒரு இடத்தில் அவர் இனி இருப்பார். ஒளிப்பதிவுக்கு எல். ராமச்சந்திரன்.  வைத்த முதல் ப்ரேமிலேயே, அவரின் லட்சியம் புரிந்தது.  கலகலன்னு ஷூட்டிங் முடித்து தந்தார்.   கரோனா கட்டத்துக்குப் பின் ரசிகர்களுக்கு எதார்த்த களம் தேவைப்படுகிறது. அதை ஆரோக்கியமாக இந்தப் படம் தொடங்கி வைக்கும். எல்லோரும் சேர்ந்து உழைத்து இருக்கிறோம்.  ஒரு அழகான   நம்பிக்கை சித்திரம் இது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT