நடிகர் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் "ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கவுள்ள நிலையில் விரைவில் இத்திரைப்படம் திரை காணவுள்ளது. இது ரஜினியின் 169-ஆவது படம். இந்நிலையில் ரஜினியின் 170-ஆவது படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகவே இருந்தது. ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ் இணைவதாகவும் தகவல்கள் அடிபட்டன.
இதையடுத்து லைகா நிறுவனம் தற்போது ரஜினியின் 170-ஆவது படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதில் தலைவர் 170-ஆவது அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினி நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.லைகா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "லைகா குழுமத் தலைவர் சுபாஸ்கரன் பிறந்தநாளில் ரஜினிகாந்த் அவர்களின் "தலைவர் 170' திரைப்படத்தின் அறிவிப்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு பெருமைமிகு தருணம் இது. தலைமுறைகள் கடந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்கின்ற ரஜினியின் "தலைவர் 170' திரைப்படத்தின் பணிகள் இனிதே ஆரம்பம்.இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், இசைவழி நம் இதயங்களை இணைக்கும் அனிருத் இசையில், பிரம்மாண்டமான திரைப்படங்களைப் படைத்தளிக்கும் சுபாஸ்கரன் தயாரிப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் தலைமைப் பொறுப்பாளர் ஜி.கே.எம். தமிழ் குமரன் அவர்களின் தலைமையில், "தலைவர் 170' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ரஜினியின் ஒவ்வொரு திரைப்பட வெளியீடும், ரசிகர்கள் கொண்டாடும் திருவிழாதான். அவருடன் மீண்டும் இணைவதில் லைகா புரொடக்ஷன்ஸ் பெருமிதம் கொள்கிறது. அனைவரின் வாழ்த்துகளோடு 2024-இல் மாபெரும் கொண்டாட்டத்திற்குத் தயாராவோம். நன்றி' என்று கூறப்பட்டுள்ளது.