சேலம் மாவட்டத்துக்கு உள்ள சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கல்வி, விளையாட்டுகளில் சிறந்துவிளங்குகின்றனர். தேசிய திறனாய்வுத் தேர்வுகளில் ஆண்டுதோறும் இந்தப் பள்ளி மாணவர்கள் பலரும் உதவித்தொகைக்குத் தேர்வாகின்றனர்.
1926-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை இருந்தது. 1980-ஆம் ஆண்டில் எட்டாம் வகுப்பு வரை தரம் உயர்த்தப்பட்டது.
மாணவர்களின் தனித்திறன்களை வெளிகொணருவதில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர். கணினிப் பயிற்சியும் பயிற்றுவிக்கப்படுகிறது. பல்வேறு அமைப்புகள் நடத்தும் போட்டிகளில் மாணவர்களும் பங்கேற்று, பரிசுகளைக் குவித்துவருகின்றனர்.
மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் நூலகத்துக்கு அழைத்து சென்று வாசிப்புப் பயிற்சியையும், பாடங்களுக்கு தகுந்த விளக்க உரை புத்தகங்களை எவ்வாறு எடுப்பது குறித்தும் விளக்கம் தருகின்றனர்.
மாணவர்களின் திறன்களை அறிந்து தங்களது பள்ளிகளில் சேர்த்துவிட கடந்த 15 ஆண்டுகளாக சங்ககிரி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தினர் பெரிதும் விரும்புகின்றனர். இரு பள்ளிகளின் ஆசிரியர்கள் தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு நேரில் சென்று எட்டாம் வகுப்பு கல்வியாண்டு முடித்து தேர்ச்சி பெற்றவர்களை ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கைக்கு வருமாறு அழைக்கின்றனர்.
இதுகுறித்து தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் (பொறுப்பு)' இரா.
முருகன் கூறியதாவது:
''அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி, உபகரணங்கள் என இலவசமாகவே அளிக்கப்படுகிறது. நல்ல கல்வியும் அளிக்கப்படுகிறது. ஆனால், பலரும் எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தொடர்ந்து முதலிடத்தில் வர வேண்டும் என்ற நோக்கத்தில் தனிப் பயிற்சியை அளிக்கிறோம். மாணவ, மாணவியர்களுக்கு பொதுஅறிவு, இயற்கை சுற்றுச்சூழல், வேலைவாய்ப்புகள் குறித்தும் விளக்கம் தருகிறோம். பள்ளி வளர்ச்சிக்கு பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மைக் குழுவினரும் உதவி வருகின்றனர்'' என்றார்.