"ஃபேமிலி மேன்' எனும் விருது பெற்ற படைப்பிற்கு கதை எழுதிய எழுத்தாளர் சுமன் குமார் எழுதி இயக்கி வரும் படம் "ரகு தாத்தா'. கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒய். யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
"கே. ஜி. எஃப்' மற்றும் 'காந்தாரா' போன்ற பிரம்மாண்டமான வெற்றிப் பெற்ற திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ், முதன் முதலில் நேரடியாக தமிழில் தயாரிக்கும் படம் இது. இது தொடர்பாக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பேசுகையில், ""ரகு தாத்தா - தனது மக்களுக்காகவும், தன்னுடைய நிலத்தின் அடையாளத்தை காப்பாற்றுவதற்காகவும் ஒரு பெண் மேற்கொள்ளும் கடினமான பயணத்தை இப்படம் விவரிக்கிறது. கொள்கை மற்றும் ஆணாதிக்கத்திற்கு இடையே தேர்வு செய்ய வேண்டிய ஒரு கடுமையான கலகக்கார இளம் பெண்ணின் கதை இது'' என குறிப்பிடுகிறார்.
ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம்- ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் சிறந்த திரைப்பட அனுபவத்தை வழங்குவதில் நற்பெயரை சம்பாதித்திருக்கிறது. இதனை அவர்களின் சமீபத்திய வெற்றிகளான "கே. ஜி. எஃப்.' மற்றும் "காந்தாரா' ஆகிய படங்களின் மூலம் உறுதியாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து "ரகு தாத்தா' எனும் படத்தின் மூலம் அவர்கள் தொடர்ந்து எல்லைகளைக் கடந்த.. அனைத்து தரப்பு பார்வையாளர்களுடன் அணுக்கமான தொடர்பு கொள்ளும் வகையிலும், சிந்தனைகளை தூண்டும் வகையிலும் கதைகளை வழங்கி வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதால், தற்போது பின்னணி மற்றும் இறுதி கட்ட பணிகள் தொடங்கி இருக்கிறது.