ஐரோப்பிய நாடுகளில் மிகப் பிரபலமாக "ஹாப்ஷூட்ஸ்' என அழைக்கப்படும் தாவரத்துக்கு டிமாண்ட். உலகின் மிக விலையுயர்ந்த காய்கறி இதுதான்.
இந்தக் காய் அதன் மருத்துவக் குணங்களுக்காகவே மிகவும் பிரபலமானது. ஒரு கிலோ ஹாப் ஷூட்ஸின் விலை தற்போது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.85 ஆயிரம்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இது பிரபலமாக இருந்தாலும், இதன் பூர்வீகம் இந்தியாதான். முதன்முதலில் ஹிமாச்சலப் பிரதேசத்தில்தான் இந்தக் காய் பயிரிடப்பட்டது. ஹியூமுலஸ் லுபுலஸ் என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஒரு கொடி தாவரம். இந்தத் தாவரம் ஆறு மீட்டர் உயரம் வரை வளர்ந்து 20 ஆண்டுகள் வாழ்கின்றன. ஆரம்பத்தில் இதை களை தாவரம் என்று நினைத்தனர். பின்னரே இதன் பயன்பாட்டை உணர்ந்து வளர்க்கத் தொடங்கினர்.
இதன் விலைக்கான காரணம்தான் நம்மை இன்னும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஹாப்ஷூட்ஸின் விலை அவற்றின் தரத்தைப் பொருத்து மாறுபடும். உயர்ந்த விலை கொண்ட காய்கறி என்பதோடு இவை சந்தையில் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.
கார்டியன் ஊடக அறிக்கையின்படி, ஹாப்ஷூட்ஸ் அறுவடைக்கு தயாராக மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்தச் செடியை கைகளால் மட்டுமே அறுவடை செய்ய முடியும். இச்செடியின் சிறிய பச்சை நுனிகளைப் பறித்து அறுவடை செய்ய அதிக மனித உழைப்பும் கவனிப்பும் தேவைப்படுகிறது. எனவே இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாது. இதன் விளைவாக இந்தக் காய் இவ்வளவு விலை அதிகமாக உள்ளது.
இந்தக் காய்கறி, காச நோய்க்கு எதிரான ஆன்டிபாயாட்டிக்களை உருவாக்குவதோடு, கவலை, தூக்கமின்மை, அமைதியின்மை, பதற்றம், உற்சாகம், கவனக்குறைவு-அதிக செயல்பாட்டுக் கோளாறு (அஈஏஈ) உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் மருத்துவக் குணங்களை கொண்டது.
இமயமலையில் பயிரிடப்படும் இதேபோன்ற விலை உயர்ந்த காய்கறியான குச்சி, இமயமலை அடிவாரத்தில் விளையும் காட்டுக் காளான் ஆகியன கிலோ ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றன.