தினமணி கொண்டாட்டம்

சூடான் :  இந்தியர்களின் கொண்டாட்டம்..!

பிஸ்மி பரிணாமன்

சரித்திரப் புகழ் பெற்றதும், பல நாடுகள் வழியாக பாயும் ஜீவநதியுமான நைல் நதிக் கரையில் இளைப்பாறும் நாடுதான் வடக்கு சூடான். இங்கு சுமார் 500 இந்தியர்கள் வாழ்கின்றனர். இவர்களில் தமிழர்கள் பெரும்பான்மை.

இந்தியத் தூதரகம் வடக்கு சூடானின் தலைநகரான கார்த்தும் நகரில் செயல்படுகிறது. சில இந்திய தொழில் நிறுவனங்களும் செயல்படுகின்றன.

பல ஆண்டுகளாக சூடானில் வாழ்ந்து வந்தாலும் இந்தியர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லை. இந்தியர்கள் ஒன்று சேர்ந்தோ அல்லது அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்தோ பொங்கல், ஹோலி, நவராத்திரி, தீபாவளி போன்ற விழாக்கள் எதையும் கொண்டாடுவதில்லை. பண்டிகைக் கொண்டாட்டம் வீட்டோடு நின்று விடும். இருப்பினும், இந்தியர்களின் உழைப்பு, நம்பகத்தன்மை சூடான் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

சூடானில் இயங்கும் இந்தியத் தூதரகத்தில் குடியரசு, சுதந்திரத் தினங்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும், பல ஆண்டுகளாக அவை தூதரகத்துக்குள் கொண்டாடும் சம்பிரதாய விழாவாகவே அமைந்திருக்கும்.

இந்த நிலையில், சூடானுக்கான இந்தியத் தூதுவராக 2022-இல் நாகர்கோவிலைச் சேர்ந்த பி.எஸ்.முபாரக் பொறுப்பு ஏற்றதும் சூடானில் இந்தியர்கள் சங்கமிக்கும்படியான சூழல் உருவாகியுள்ளது. இவர் இந்தியர்களைச் சந்தித்து பேசி, ஒரு திருப்பத்துக்கு வழிவகுத்தார். இதன்தொடக்கமாக, "இந்திய உணவு விழா' அண்மையில் நடைபெற்றது.

சூடானில் பல ஆண்டுகளாக வாழும் இந்தியர்கள் நெருங்கி வந்து ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி ஒரு குடும்பமாக மாறியுள்ளனர்.

75-ஆவது "சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா' மூலம் சூடானில் " குட்டி இந்தியா' சாத்தியமானது.

உணவு விழாவின்போது, வட இந்தியர்களுக்கு இட்லி, வடை, சாம்பாரை தென்னிந்தியர்கள் விழாவில் அறிமுகப்படுத்தினர். தென் இந்தியர்களுக்கு கச்சோரி, தால் மக்னீ, பாவ் பாஜி அறிமுகமாயின. பல மாநில கலாசாரங்களை பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சிகள் மேடையில் அரங்கேறின.

இதன்தொடர்ச்சியாக, சூடான் வரலாற்றில் முதல் முறையாக பொங்கல் விழா ஜனவரி 13-இல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் கொண்டாடும் விழாவாக அமையாமல், அனைத்து இந்தியர்களும் கொண்டாடும் விழாவாக மாறியிருந்தது. விழாவில் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல், கரும்பு வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றதும் தமிழக உணவுகள் அடங்கிய விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனவரி 26-இல் சூடான் இந்தியத் தூதரகம் கொண்டாடிய குடியரசு விழாவும் சூடான் இந்தியர்களின் விழாவாக அது மாறியது.

கார்த்தும் நகரிலிருந்து போர்ட் சூடான் சுமார் 900 கி.மீ. தொலைவில் உள்ளது. விமானத்தில்தான் பயணிக்க வேண்டும். அந்தத் துறைமுகப் பேரூரிலும் இந்தியர்கள் வாழ்கின்றனர். அங்கும் முபாரக் சென்று இந்திய சமூகத்தினரை சந்தித்து வந்துள்ளார்.

இதுகுறித்து தமிழர்கள் சிலர் கூறியதாவது:

""இந்தியாவைவிட்டு வெகு தூரத்தில் வளர்ச்சி அடையாத, பொழுதுபோக்கு வசதிகள் இல்லாத சூடானில் இந்தியர்கள் தனித்தனியாகவும், குடும்பத்துடன் ஒருவரோடு ஒருவர் சேராமல் வசித்துவந்தனர். இவர்களை முதல் முறையாக நட்பு மாலையில் கோர்த்திருக்கிறது. இந்தப் பரஸ்பர அறிமுகங்கள் தந்த உற்சாகத்தில் "வாரிசு' படத்தை உரிய அனுமதியுடன் துணைக் கோள் வழியாக கார்த்தும் நகரில் திரையிடப்பட்டது.

பின்னர், "பதான்' ஹிந்திப் படமும் இந்தியாவில் படங்கள் வெளியான நாளே திரையிடப்பட்டது. இவையெல்லாம், தனிநபர்களின் முதல் முயற்சி என்றாலும் சூடானில் "குட்டி இந்தியா' உருவான உற்சாகத்தில் தெம்பில் இருக்கின்றனர்.

அப்போலோ மருத்துவமனை தனது மருத்துவச் சேவையை கார்த்தும் மருத்துவமனை ஒன்றுடன் இணைந்து அண்மையில் தொடங்கியது.

இரண்டு நாடுகளிடையே நட்பை, இனிய உறவை உறுதிப்படுத்துபவர்தான் தூதராக முபாரக், உள்ளார்'' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT