பிளஸ் 2 படித்துவிட்டு என்ன செய்ய முடியும் என்ற கேட்பவர்களுக்கு மத்தியில் சாதனையாளராக மாறியுள்ளார் இருபத்தொரு வயதே நிரம்பிய குக்கிராமத்து மாணவன். அதுவும் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி என்றால் அதிசயம்தானே!
பொதுவாக சி.ஏ, தேர்வு மிக கடினமானது என்று கூறுவார்கள். அத்தகைய தேர்வை கூட முயற்சி செய்தால் எளிதாக வென்று விடலாம் என நிகழ்த்தி காட்டியவர்தான் அம்மையப்ப சண்முகமீனாட்சி,. தென்காசி மாவட்டம், பண்பொழி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு உதாரணமாக உள்ள அவரிடம் பேசியபோது:
""எனது தந்தை லட்சுமணன் , கோயிலில் பணியாற்றி வருகிறார். தாய் பாப்பாமீனா குடும்பத் தலைவி. நான் பண்பொழியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தேன். தேர்ச்சி முடித்தவுடன் எனது நண்பர்கள் உயர்கல்வி கற்க சென்று விட்டனர்.
செங்கோட்டை அரசு நூலகத்தில் சி.ஏ. கருத்தரங்கில் கலந்துகொண்டேன். பயிற்சியாளர் கார்த்திக்கின் , ஆலோசனையின்படி, எனது 17 ஆவது வயதில்(2018-இல்) படிக்க தொடங்கினேன். மே, நவம்பர் மாதங்களில் தேர்வு நடைபெறும். நான் பிளஸ் 2 முடித்து நேரடியாக சி.ஏ. எழுதிய காரணத்தால் பவுண்டேஷன் தேர்வு எழுத வேண்டியிருந்தது. 2018-இல் ஒரே முயற்சியில் வென்றேன்.2020-இல் இன்டர்மீடியட் முடித்தேன். இறுதித் தேர்வை 2022 நவம்பரில் நிறைவு செய்தேன். ஜனவரி 10-இல் இதற்கான தேர்வு முடிவு வெளியாகியது. அதில் நான் தேர்வு பெற்று விட்டேன். அதுவும் ஒரே முயற்சியில்தான்.நூலகர் ராமசாமி , பாராளுமன்ற செயலக முன்னாள் இயக்குநர் பெருமாள் உள்ளிட்டோர் வழிகாட்டியதும் மறக்க முடியாதது'' என்றார்.