படகுப் பயணமும்
பதிவேட்டின் பதிவும்!
ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு நிறைவடையும் இந்த நேரத்தில் அவர் பற்றிய சுவாரஸ்யமான பதிவு நினைவுக்கு வருகிறது.
1985-ஆம் ஆண்டு, எழுத்தாளர் அகிலன் எர்ணாகுளம் வருகை தந்தார். அப்போது, எர்ணாகுளம் முத்தமிழ்ச் சங்க நிர்வாகிகளுடன் படகுப் பயணம் சென்று வந்தது மறக்க முடியாத ஓர் அனுபவம். படகில் எழுத்தாளர் அகிலன், நான் மற்றும் எங்களுடன்
சிவபிரகாசம், பிஸ்மி பரிணாமன், கே.ஜி.ஜவகர், அழகுராஜா, மாரியப்பன் ஆகியோரும் படகில் உடன் பயணித்தனர். எழுத்தாளர் அகிலனுடன் படகில் பயணித்த அந்த நாள் இன்றைக்கு நினைத்தாலும் தேனாய் இனிக்கிறது.
மேலும், ஞானபீட விருது பெற்ற மலையாள எழுத்தாளரான அமரர் சங்கரகுரூப் வீட்டிற்கு எழுத்தாளர் அகிலன் எங்களை அழைத்துச் சென்றார். அப்போது அமரர் சங்கரகுரூபின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, கண்ணீர் மல்க அவர் அஞ்சலி செலுத்தியது மறக்க முடியாத நினைவு. பூர்ணா நதியும், ஆதிசங்கரரின் காலடியும் அகிலனை பெரிதும் கவர்ந்தது. அதை, ""காலடி எனும் இந்தப் புண்ணிய பூமியில் என் காலடி படுவது பெரும் நிறைவைத் தருகிறது'' என மடத்தின் விருந்தினர் புத்தகத்தில் (பதிவேட்டில்) அவர் பதிவு செய்தார்.
(அகிலன் நூற்றாண்டு நிறைவு 27.6.2022)