இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவிட தமிழகத்திலிருந்து நிவாரணப் பொருள்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டுவருகின்றன.
சில தனியார் அமைப்புகளும் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றன. சென்னை வடக்கு ரோட்டரி சங்கத்தின் மேற்பார்வையில், ரோட்டரி சங்கங்கள் சார்பில் சென்னையில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் 70 டன் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அண்மையில் அனுப்பிவைக்கப்பட்டன.
இலங்கைக்கான துணைத் தூதுவர் வெங்கடேஸ்வரனிடம் ரோட்டரி சங்கத்தின் வருங்கால ஆளுநர்கள் ஜே.கே.என். பழனி (3231), சரவணன் (3232) மேனாள் ஆளுநர் சம்பத்குமார் உள்ளிட்டோர் அளித்தனர். இந்த நிவாரணப் பொருள்கள் சென்னைத் துறைமுகத்திலிருந்து தனிக் கப்பலில் இலங்கைக்குச் சென்றது.
இதுகுறித்து திட்டத் தலைவர் ஜி.ஒளிவண்ணன் கூறியதாவது:
""இலங்கைக்கு முதல்கட்டமாக, ரூ.50 லட்சம் மதிப்பில் மருந்துகளை விமானத்தில் அனுப்பிவைத்தோம். இரண்டாம் கட்டமாக, 70 டன் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அளிக்கப்பட்டன.
இலங்கையில் கேஸ் விலை உயர்வு, எரிபொருள் விலை உயர்வு இருக்கிறது. இதனால் அங்கு வசிப்போர் நிலக்கரி அடுப்பு கோருகின்றனர். அங்கு நிலக்கரி தராளாமாகக் கிடைப்பதால், நிலக்கரி அடுப்பை கோருகின்றனர்'' என்றார்.