தினமணி கொண்டாட்டம்

ரத்தத்தின் த்தமே... - 50

டாக்டர் எஸ். அமுதகுமார்

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை. கடற்கரையிலிருந்து சுமார் 200 மீட்டர் அருகில் அமைந்துள்ள அழகான ஒரு வீடு. வீட்டிலிருந்தபடியே கடலைப் பார்த்து ரசிக்கலாம். கடல் அலைகளின் ஓசையையும் ரசித்துக் கேட்கலாம். அந்த அழகான வீட்டுக்குச் சொந்தக்காரராகிய 62 வயது பெண்மணிக்கு எப்பொழுது பார்த்தாலும் தலைவலி. நடந்துவிட்டு வந்தால் தலைவலி. அருகிலுள்ள கடைக்குப் போய்விட்டு வந்தாலும் தலைவலி. வீட்டில் சும்மா இருந்தாலும் தலைவலி. இது மாதக்கணக்கில் தொடர்ந்து இருக்கிறது. தினமும் வலி மாத்திரைகளை உபயோகித்து வந்தார் அந்த அம்மா. வலி நிரந்தரமாக தீர்ந்தபாடில்லை. "வலிக்குண்டான அடிப்படைக் காரணங்களைக் கண்டுபிடித்தீர்களா?' என்று கேட்டேன். சரியான பதில் இல்லை. காரணங்களைக் கண்டுபிடித்துத் தெரிந்து கொள்ள அந்தப் பெண்மணி விரும்பவில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். அடிக்கடி தலைவலி வந்து அவருக்கு வாழ்க்கை மீது நாட்டம் இல்லாமல் ஆக்கிவிட்டது.
"சாப்பாட்டில் ஏதாவது மாற்றம் செய்திருக்கிறீர்களா, உணவின் அளவை மாற்றியிருக்கிறீர்களா, நல்ல தூக்கம் இருக்கிறதா, மன அழுத்தம் ஏற்படக்கூடிய ஏதாவதொரு விஷயத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா, குடும்பத்தில் உள்ளவர்களினாலோ, அக்கம் பக்கத்து வீட்டிலுள்ளவர்களினாலோ, நண்பர்களினாலோ, உடன் வேலை பார்ப்பவர்களினாலோ, பணப்பிரச்னையினாலோ, பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா, அதிக அளவில் மருந்து, மாத்திரை சாப்பிட்டதனாலா, மிக அதிக வெளிச்சத்தில் அதிக நேரம் இருக்கிறீர்களா, மிக அதிக சத்தத்தில் அதிக நேரம் இருக்கிறீர்களா, அதிக வாசனையுள்ள கெமிக்கல் உபயோகிக்கும் இடத்தில் இருக்கிறீர்களா, வீட்டிலுள்ளவர்கள் போட்டிருக்கும் சென்ட் வாசனை பிடிக்கவில்லையா, மதுப்பழக்கம் இருக்கிறதா இப்படி இன்னும் பல காரணங்களைச் சொல்லிக் கேட்டுப் பார்த்தேன். எதனால் வருகிறது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை என சொல்லிவிட்டர் அந்தப் பெண்மணி.
தலைவலி-ஒரு பொதுவான பிரச்னை. எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஒரு அன்றாடப் பிரச்னை. தலைவலியை சந்திக்காதவர்கள் மிகமிகக் குறைவு. தனக்குப் பிடிக்காதவர்களை திடீரென்று சிலர் பார்த்தால் கூட, உடனே தலைவலி வந்துவிடும். நெற்றிப் பொட்டிலோ,  நெற்றி முழுவதுமோ, பின் மண்டையிலோ, பக்கவாட்டில் காதுகளின் மேலோ ஏற்படும் வலியையே நாம் தலைவலி என்று சொல்கிறோம். மண்டையைப் பிளக்கிற அளவுக்கு வலி இருக்கிறது என்பார்களே அதுபோல, தலைவலி உடம்பே துடிக்கிற அளவுக்கு சிலருக்கு இருக்கும். சிலருக்கு தொடர்ந்து வலி இருக்கும். 
சிலருக்கு லேசான தலைவலி, ஆனால் தொடர்ந்து இருக்கும். இப்படி தலைவலி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். உலகில் சுமார் 75 சதவீத பெரியவர்களுக்கு தலைவலி,  ஒரு முறையாவது வந்துவிட்டுப் போயிருக்கும்.
ஒற்றைத் தலைவலி வந்தாலே தாங்க முடியவில்லை. ஆனால் சொன்னால் நம்பமாட்டீர்கள். சுமார் 150 வகைகளுக்கு மேல் தலைவலி இருக்கிறதாம். இருக்கும் தலையோ ஒன்று. ஆனால் ஏற்படும் தலைவலியின் வகையோ 150. இதை நினைத்தாலே, தலைவலி வந்துவிடும் போல இருக்கிறது. தானாகவே ஏற்படும் தலைவலி ஒரு வகை. உடலில் ஏற்படும் மற்ற நோய்களினால் ஏற்படும் தலைவலி இன்னொரு வகை.
சில குடும்பங்களில் தலைவலி பரம்பரையாக வருவதுண்டு. குறிப்பாக "மைக்ரெய்ன்' என்று சொல்லப்படும் ஒற்றைத் தலைவலி, குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருப்பதுண்டு. சில சுற்றுச்சூழல் காரணங்கள்கூட, சில குடும்பங்களில் தொடர்ந்து தலைவலியை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். சில உணவுப்பொருட்கள், சில உணவு வகைகள், உடலுக்கு ஒத்துக்கொள்ளாத, ஒவ்வாமையை உண்டுபண்ணக்கூடிய சில பொருட்கள், சிகரெட் புகை நாற்றம், சென்ட், வீட்டுப் பாத்ரூம்களில் உபயோகப்படுத்தும் சில க்ளீனிங் பவுடர்கள் திரவங்கள் முதலியவை கூட தலைவலியை ஏற்படுத்திவிடும்.
தலைவலி ஏற்படும் அந்த இடத்திலுள்ள நரம்புகள், ரத்தக்குழாய்கள் மற்றும் மூளை ஆகிய மூன்றும் சேர்ந்து உண்டாக்கும் செயலே தலைவலியாகும். ஏதாவதொரு காரணத்தினால் தலையிலுள்ள நரம்புகள் தூண்டப்பட்டு, வலியை ஏற்படுத்தும் சிக்னல்கள் மூளையைச் சென்றடைந்து, மூளை, வலியை உணரச் செய்கிறது. ஒற்றைத் தவைலியில் கூட,  நரம்பு செல்கள் தூண்டப்பட்டு, ரத்தக் குழாய்களுக்கு சிக்னல் அனுப்பப்பட்டு,  இந்த சிக்னல்கள் மூளையைச் சென்றடைந்து தாங்க முடியாத ஒற்றைத் தலைவலியை உண்டாக்குகிறது. "மைக்ரெய்ன்' என்று சொல்லக்கூடிய இந்த ஒற்றைத் தலைவலியில் , அதிக வலி, வாந்தி, அந்த நேரத்தில் எந்தவொரு சிறிய ஒளியைப் பார்த்தாலும் எரிச்சல், எந்தவொரு சிறிய சத்தத்தைக் கேட்டாலும் எரிச்சல், வயிற்றைக் கலக்குவது, வயிற்றுவலி போன்றவைகளும் சேர்ந்து ஏற்படுவதுண்டு.
க்ளஸ்டர் தலைவலி என்று சொல்லக்கூடிய ஒருவகை தலைவலி இளவேனிற் காலம் அல்லது இலையுதிர் காலத்தில் அடிக்கடி, அதிகமாக ஏற்படும். தாங்க முடியாத தலைவலி, ஒரு நாளிலேயே ஏழெட்டு முறை வரும். மாதக்கணக்கில் கூட சுத்தியல் அல்லது சம்மட்டியை வைத்து உச்சந்தலையில் அடித்தாற்போன்றதொரு வலி இருக்கும்.
மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் வலி குணமாகாத சில தலைவலிகள் இருக்கின்றன. கன்னத்துக்குப் பின்புறமும், மூக்கின் பின்புறமும், நெற்றியின் பின்புறமும் உள்ள "சைனஸ்' என்று சொல்லக்கூடிய எலும்பு வெற்றிடத்தில், அடைசல் ஏற்பட்டு நீர் சேர்ந்து நோயாகிவிடுவதையே "சைனஸ் நோய்' என்று சொல்வதுண்டு. இந்த "சைனஸ்' நோய் ஏற்பட்டாலும், தாங்கமுடியாத தலைவலி வந்துவிடும். வாய்க்கசப்பு, கன்னத்திலும், நெற்றியிலும் ஆழமான வலி, முகம் வீங்கிப் போதல், காதடைப்பு, காய்ச்சல், தலையை அப்படி இப்படி திருப்பினால் கூட தாங்கமுடியாத வலி, சூரிய வெளிச்சத்தைப் பார்க்க முடியாமற் போதல் மூக்கில் சளி வடிதல் போன்றவை "சைனஸ்' தலைவலியோடு சேர்ந்திருக்கும். 
மாத்திரை போட்டால்தான் தலைவலி போகும் என்று நினைத்து, அடிக்கடி மாத்திரைகளைப் போட்டுப் போட்டு, கடைசியில் அந்த மாத்திரையே தலைவலியை உண்டாக்கிவிடுவதும் உண்டு.
குழந்தைகளுக்கும் இந்தக் காலத்தில் தலைவலி வர ஆரம்பித்துவிட்டது. தூக்க நேரம் மாறினாலோ, தூங்கும் நேரம் குறைந்தாலோ குழந்தைகளுக்கு தலைவலி வந்துவிடும். பள்ளிக்கூடத்தில் ஏற்படும் பிரச்னைகள், ஹோம் ஒர்க், மதிய சாப்பாடு போன்ற சின்னச் சின்ன பிரச்னைகள் கூட தலைவலியை ஏற்படுத்தி விடுவதுண்டு. "எனக்கு ஒரே டென்ஷனா இருக்கு, தலையெல்லாம் வலிக்குது,  கொஞ்சம் சும்மா இருக்கிறீங்களா என்று 4 வயது குழந்தை சொல்கிற அளவுக்கு இன்றைய காலகட்டம் மாறிவிட்டது. பார்வைக் குறைபாடு இருந்தாலும் சரி, குழந்தைகளுக்கு தலைவலி வருவதுண்டு.
தலையில் சாதாரண கட்டி,  மூளையில் கட்டி,  மூளையில் ரத்தக் கசிவு, மூளைக் காய்ச்சல் நோய், மூளையில் ரத்தம் உறைதல், தலையில் காயம் போன்றவைகள் கூட தலைவலியை உண்டு செய்துவிடும்.
தலைவலி வராமல் தடுப்பது எப்படி? தலைவலியைத் தூண்டும் காரணங்கள் என்னென்ன என்று அலசி, ஆராய்ந்து, அதை அகற்றிவிட்டாலே தலைவலி வராமல் போய்விடும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், உங்களுக்கு அத்தர், போன்ற வாசனைத் திரவியங்கள் பிடிக்காது. அந்த வாசனையை நுகர்ந்தாலே தலைவலி வந்துவிடும் என்று தெரியவந்தால், முதலில் வாசனைத் திரவியங்கள் உபயோகிப்பதை தவிர்த்துவிடுங்கள். சென்ட் 
உபயோகிப்பவர்கள் அருகில் நீங்கள் செல்லாதீர்கள். இதே மாதிரிதான் உங்களுக்கு ஒத்துக் கொள்ளாத விஷயங்களை ஒதுக்கி விடுங்கள்.
அதிக ரத்த அழுத்தம் தலைவலியை உண்டாக்கும். எனவே ரத்த அழுத்தத்தை கண்ட்ரோலில் வைத்துக் கொள்ளுங்கள். நாள்பட்ட மலச்சிக்கல், தலைவலியை உண்டாக்கும். மலச்சிக்கலை நீக்குங்கள். தலைவலி தானாக பறந்துபோகும். போதுமான நேரம் தூக்கம் இல்லையென்றாலும் தலைவலி வரும். எனவே எந்த வேலை எப்படி போனாலும் சரி, தூக்கத்திற்கு போதுமான நேரத்தை ஒதுக்கிவிடுங்கள். இரவில் அதிக நேரம் கண்விழித்து வேலை பார்க்காதீர்கள். இடையிடையே கண்களுக்கு ஐந்து நிமிடங்கள் ஓய்வு கொடுங்கள். பார்வைக் குறைபாடு கூட தலைவலியை உண்டாக்கும். எனவே, உடனே கண் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். டிவி, கம்ப்யூட்டர்,  லேப்டாப், செல்போன் போன்றவற்றில் அதிக நேரம் கண்களுக்கு வேலை கொடுக்காதீர்கள். பிடிக்காத விஷயங்களில் தேவையில்லாமல் தலையை நுழைத்து, தலைவலியை உண்டாக்கிக் கொள்ளாதீர்கள்.
தலைவலி ஏற்பட்டபோது, குளிர்ச்சியான தண்ணீரில் கைக்குட்டை அல்லது சிறிய துண்டை நன்றாக நனைந்து, பிழிந்து, கண்களை மூடிக்கொண்டு, இரண்டு கண்களிலும் ஒத்தடம் கொடுத்துக் கொண்டே இருங்கள். தலையை, கழுத்தை, முதுகை,  தோள்பகுதியை லேசாக அமுக்கிவிடச் சொல்லுங்கள். அமைதியான, இருளான அறையில் சற்று நேரம் கண்ணை மூடிக் கொண்டு படுத்திருங்கள். வீட்டை விட்டு வெளியில் வந்து காலாற, மெதுவாக கொஞ்சதூரம் நடந்து சென்றுவிட்டு திரும்புங்கள். மனதை திசைதிருப்ப, உங்களுக்குப் பிடித்த இனிமையான பாடலைக் கேளுங்கள். இவைகளெல்லாம், உங்கள் தலைவலியைக் குறைக்கவில்லை என்றால், வலி நிவாரண தைலங்களை தேயுங்கள்,தடவுங்கள். இதற்கும் மசியவில்லை என்றால், வலி மாத்திரையை உபயோகியுங்கள். தலைவலி மாத்திரையை உபயோகிப்பது என்பது கடைசியாக இருக்கட்டும். 
வலி மாத்திரையை அடிக்கடி அதிகமாக உபயோகிக்காதீர்கள். பெரும்பாலான வலி மாத்திரைகள் அதிக அளவில், அதிக நாள்கள் டாக்டரின் ஆலோசனையின்றி எடுத்துக் கொண்டால், உடலுக்குள் மிகப்பெரிய பாதிப்பை உண்டு செய்துவிடும். அப்புறம் தலைவலி போய் திருகுவலி வந்தது என்றொரு பழமொழி சொல்வார்களே அது போல ஆகிவிடும்.

- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT